வானம் நோக்கி பறந்த தேசியப் பறவை… மின்சாரத்தால் மௌனமானது!
தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை எடுச்சென்று அடக்கம் செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மயிலை வனத்துறையினர் மீட்டு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
தஞ்சையில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் மரங்கள் உள்ளன. இந்த விளையட்டு அரங்கம் உட்பட மரங்களில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன. இந்த மைதானத்திற்கு நடைபயிற்சிக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்கள் மயில் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை மைதானத்திற்குள் சுற்றித்தரிந்த மயில் திடீரென உயரே பறந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மின்கம்பியில் மயில் உடல் உரசி உள்ளது. இதில் மின்சாரம் தாக்கிய மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை எடுச்சென்று அடக்கம் செய்தனர். மேலும் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக இருப்பதால், அதன் உயிரிழப்பு பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக நகர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் சமீபகாலமாக வெகுவாக அதிகரித்துள்ளது. நகர் பகுதியில் மயில்கள் அதிகரிப்பதற்கு காடுகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி, அவை நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மயில்களின் எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் மாற்றங்களும், வறட்சியும் மயில்கள் நகரங்களுக்குள் வர முக்கிய காரணங்களாக இருக்கலாம் .உணவு எளிதாக மயில்களுக்கு கிடைக்கிறது. மக்கள் வீடுகளுக்கு அருகில் உணவிடுவது மற்றும் தோட்டம், பூங்காக்களில் உள்ள தாவரங்கள், பூச்சிகள் உணவாக கிடைப்பதால், நகர சூழலுக்கு பழகிவிடுகின்றன. நகர் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பிகளில் மோதுவதால் மயில்கள் உயிரிழக்கின்றன. சாலைகளில் குறுக்கே வருவதால் வாகனங்களில் மோதி உயிரிழக்கின்றன.
நகர்ப்புறங்களில் மயில்கள் பெருகுவது இயற்கையோடு இணைந்த வாழ்வியலை உணர்த்தினாலும், அவற்றுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் நகர்ப்புற திட்டமிடல் இருப்பது அவசியமாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















