தஞ்சாவூர்: சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ வாயிலாக பல்வேறு கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள்
இந்த முகாம்களில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வந்து கடன்கள் பெற்று பயனடையலாம்.

தஞ்சாவூர்: சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ வாயிலாக பல்வேறு கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்று பயன்பெற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.
டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் பின்வரும் தேதிகளில் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
வரும் 21ம் தேதி காலை அதிராம்பட்டினம் கூட்டுறவு நகர கடன் சங்கம் விட். அலுவலகத்திலும், 28ம் தேதி காலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மார்ச் 2ம் தேதி காலை திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
மேற்படி கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். தகுதியாளவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாராரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் , திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் அசல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாம்களில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வந்து கடன்கள் பெற்று பயனடையலாம். தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், ஆகிய திட்டங்கள் என பலவகை கடன்கள் வழங்கப்படுகிறது. சிறுதொழில் கடன் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். கல்வி கடன் திட்டத்தை பெற்று மாணவ, மாணவிகள் தங்களின் மேற்படிப்பை தொடர்ந்து முன்னேற்றம் அடையலாம். எனவே குறிப்பிட்ட ஊர்களில் அந்தந்த தேதிகளில் தவறாமல் தகுந்த ஆவணங்களை கொண்டு சென்று பங்கேற்று பயன்பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

