(Source: Poll of Polls)
விபத்துக்கள் நடக்கும் பகுதி... சிறிய ரவுண்டானா கட்டுங்களேன்: பொதுமக்கள் வலியுறுத்தல்
தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது இப்பகுதி வழியாக புதுக்கோட்டை உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதி அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் திருச்சிக்கு செல்லும் வாகனங்கள், வல்லத்தில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். முக்கியமாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இப்பகுதி வழியாக சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் வேகத்தடை உள்ளது. மேலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அடிக்கடி வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து போன்றவை இப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் வேகமாக வரும் பேருந்துகள், வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் திருக்கானூர்பட்டி நால் ரோட்டை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான கிராமப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களுக்கு தேவையான உரங்கள் உட்பட இடுபொருட்களை இருசக்கர வாகனங்களில் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது, இவ்வாறு வரும் வாகனங்கள் வலது புறம் மற்றும் இடதுபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து வந்த அரசு பேருந்து திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி பயணிகள் காயமடைந்த சம்பவமும் நடந்தது. இதே போல் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த பஸ்சும் ஒரத்தநாட்டிலிருந்து வல்லம் நோக்கி சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் வேனும் மோதிக்கொண்டு விபத்தும் உள்ளாகி பயணிகள் காயமடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நான்கு புறமும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















