தஞ்சாவூரில் மின்கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!
தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலானது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மின்கசிவு காரணத்தால் 5 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன்கோயில் தெரு பகுதியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் எரிந்ததில், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தளவாடப்பொருட்கள் ஆகியவை எரிந்து சேதமானது.
தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஸ்கூல் பேக் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன்,தனசேகரன், குமார், பாண்டி, ராஜேந்திரன் ஆகியோரது வீடுகள் தீயில் எரிந்தது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் சுமார் 1 மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள், உடமைகள், சைக்கிள்கள், வாஷிங் மெஷின், ஸ்கூல் பேக்குகள், செருப்பு தைக்கும் தளவாடப் பொருட்கள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
12 பைக்குகள் திருடியவர் தனிப்படையிடம் சிக்கினார்
கும்பகோணம் கோர்ட்டு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நீடாமங்கலம், ஜெயங்கொண்டம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு சிகிச்சை பெற வருபவர்களின் வாகனங்கள் தொடர்ந்து திருட்டு நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்க்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அவர் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இளையராஜாஆத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் எஸ். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (43) என்பதும் மோட்டார் சைக்கிளில் திருடியதும் தெரியவந்தது.
அவரை கைது செய்து பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்ட 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் கணேஷ்குமார் மயிலாடுதுறை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பதும், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த இவருக்கு கடன் தொல்லை இருந்ததால், மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து செல்லும் போது கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடி வந்துள்ளார். தற்போது நீண்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி மோட்டார் சைக்கிள் திருடியவரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் முனியரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தலைமை காவலர்கள் காமராஜ், ஜனார்த்தன், அரிகிருஷ்ணன், காவலர்கள் ராம்குமார், பரணிதரன்(தனிப்பிரிவு) ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.























