தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 226 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: ஆவணங்கள் இன்றி வியாபாரி கொண்டு வந்த ரூ.60 ஆயிரத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதியானது கடந்த 15-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனால் அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து 15-ந் தேதி மாலை முதல் தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சை அம்மன்பேட்டை பைபாஸ் சாலையில் ஜாய் செபஸ்டின் மேரி தலைமையிலான நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வியாபாரி ஒருவரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.60 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் பழைய இரும்பு கடைக்கு எடுத்து செல்வதாக அந்த வியாபாரி கூறினார். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 ஆயிரத்தை வியாபாரியிடம் இருந்து நிலையான கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்த பணம் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இதுவரை தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 226 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் உரியவரிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதேபோல் கும்பகோணம் பகுதியில் காரைக்கால் பைபாஸ் சாலை சீனிவாச நல்லூர் செல்லியம்மன் கோவில் பகுதியில் கூட்டுறவு சார்பதிவாளர் பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சரக்கு வேனில் ரூ.84 ஆயிரத்து 570 ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சரக்கு வேனில் வந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலை இடம் ஒப்படைத்தனர்.
வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் அருகே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டாட்சியர் சாந்தமீனா தலைமையில் நடைபெற்றது தமிழகத்தில் வருகிற ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது இந்நிலையில் அனைத்து பகுதிகளும் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் வாயிலில் நேற்று காலை 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வாயிலில் தேர்தல் நாள் குறிப்பிட்டு வண்ண கோலமிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி வாக்குப்பதிவு அவசியத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் தாசில்தார் சாந்தமீனா தலைமை வகித்தார். நிகழ்ச்சிகள் மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி கிராம உதவியாளர் சீனிவாசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















