தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்!
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பைபாஸ் பகுதி மற்றும் தெற்கு வீதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூரில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், கட்சி கொடிகள் மற்றும் கட்சி சின்னங்களை குறிக்கும் அனைத்து அடையாளங்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையில் பெண் போலீசார் வாணி, ஷாலினி ஆகியோர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரவிந்த் என்பவர் ஓட்டி வந்த பைக்கை சோதனை செய்தபோது அதில் ஆவணங்கள் இன்றி லட்சக்கணக்கில் பணம் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பணத்தை தஞ்சை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதில் பைக்கில் கொண்டு வரப்பட்ட தொகை ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 ஐ தாசில்தார் சிவக்குமார் வசம் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் ஒப்படைத்தார். அப்போது துணை தாசில்தார் சரவணன் உடன் இருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொண்டு சென்றால் அதற்குரிய உரிய ஆவணங்கள் இல்லாத போது அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு வீதியில் பறக்கும்படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள், போலீசார் நேற்று இரவில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.2.14 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் மொத்த மருந்து விற்பனை ஏஜென்சி நிறுவனத்தில் இருந்து ரூ.2.14 லட்சம் ரொக்கம் வாகனத்தில் எடுத்து வைத்து கொண்டு செல்ல முயன்றதும் ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















