110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
தஞ்சையில் தொடர்ந்து 110 ஆண்டுகளாக இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை திரு இருதய மறைமாவட்ட பேராலய பங்கு பாஸ்கு கலை மன்றம் சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் 110 ஆண்டுகளாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்து வரும் பாஸ்கா நாடகம் நேற்று நடைபெற்றது. இதில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று நடித்தனர்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 46 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து, அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடந்தன. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடந்தன.
தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் அடிகளார் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில், புது நெருப்பு, புது நீர் புனிதம் செய்யும் சடங்குகள், மறையுரை, கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றன. இதையடுத்து, இறை மக்கள் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், வியாகுல மாதா ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்தெழுந்த காட்சியை நினைவுகூரும் விதமாக உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இயேசுவின் உயிர்த்த ஆண்டவரின் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, பவனியாக திரு இருதய பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அதிகாலை கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
இவ்வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், உதவிப் பங்குத் தந்தையர்கள் எஸ். அரவிந்த், எம். ஜெனித் லாரன்ஸ், மறை மாவட்டப் பொருளாளர் எஸ். சேசுராஜ், திட்டக் குழுச் செயலர் ஜான் பீட்டர், ஆயரின் செயலர் ஷெரில் கியூபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பெருவிழாவை ஒட்டி ‘பாஸ்கா’ எனும் இயேசுவின் வாழ்க்கை நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் ஆவூர், இடைக்காட்டூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி போன்ற இடங்களில் இந்த நாடகம் நடத்தப்பட்டன. பல இடங்களில் இந்த நாடகம் நின்று விட்டது.
ஆனால் தஞ்சையில் தொடர்ந்து 110 ஆண்டுகளாக இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை திரு இருதய மறைமாவட்ட பேராலய பங்கு பாஸ்கு கலை மன்றம் சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று தஞ்சை வியாகுல அன்னை ஆலய வளாகத்தில் இந்த நாடகம் நடைபெற்றது.
இதனை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தொடங்கி வைத்தார். இதில் பங்குத்தந்தைகள் பிரபாகர், அரவிந்த், ஜெனித்லாரன்ஸ், பாஸ்கு கலைமன்ற தலைவர் யாகப்பா, இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இயேசுவின் உயிர்ப்பு மற்றும் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு நடித்தனர். வழக்கமாக இந்த நாடகம் இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 5 மணி வரை விடிய, விடிய நடைபெறும். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறை காரணமாக இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற்றது.
இதில் பாஸ்கா நாடகம் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி புத்தகம் வெளியிட்ட பங்குத்தந்தை அகஸ்டின் கவுரவிக்கப்பட்டார். இதே போன்று பாஸ்கா நாடகத்தில் 50 ஆண்டுகளாக மாதா வேடத்தில் நடித்து வரும் ராணிஜெயாவும் கவுரவிக்கப்பட்டார். இந்த நாடகத்தை அனைத்து மதத்தினரும் கண்டுகளித்தனர். முன்னதாக கிளமெண்ட் அந்தோணிராஜ் வரவேற்றார். முடிவில் செயலாளர் வின்சென்ட் சகாயராஜ் நன்றி கூறினார்.























