ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை ஒட்டி தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் 299 பணிகள் ரூ.26.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
மேட்டூர் அணை திறப்பிற்கு முன்னதாக கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கி வைத்தார். அந்த வகையில் தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தொலைதூரம் 1.50 கி.மீ, ரெங்கோடையான் ஏரி உபரி நீர் வடிகால் தொலைதூரம் 0.50 கி.மீ வரை தூர்வாரும் பணி ரூ.5 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கருப்பன்கோட்டை வாரி மானோஜிப்பட்டி கிராமத்தில் தொடங்கி முதலைமுத்து வாரி வடிகாலில் கலக்கிறது. இந்த வடிகால் மூலம் 250 ஏக்கர் கல்லணைக் கால்வாயின் பாசன பரப்பு கூடுதல் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. கருப்பன்கோட்டை வாரியின் மொத்த நீளம் 1.50 கி.மீ. சராசரி அகலம் 6.00மீ மற்றும் கொள்ளளவு 210.00 கனஅடி ஆகும்.
கருப்பன்கோட்டை வாரியில் தற்சமயம் ஆங்காங்கே மண்மேடிட்டு இருப்பதாலும் ஆகாயத்தாமரை மற்றும் கோரைபுற்கள் அதிக அளவில் காணப்படுவதாலும் நீர் கடத்தும் திறன் குறைந்து கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பாசன நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கருப்பன்கோட்டை வாரியை தூர்வாரி கரைகளை பலபடுத்தவும் நீர் கடத்தும் திறனை மேம்படுத்துவது அவசியமான ஒன்றாக உள்ளது. கருப்பன்கோட்டை வாரியை தூர்வாரி சீரமைக்குமாறு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதன் அடிப்படையில் கருப்பன்கோட்டை வாரியை தூர்வார ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது
இந்த மழை நீர் வடிகால் மூலம் நீலகிரி தெற்கு தோட்டம் மற்றும் மானோஜிப்பட்டி கிராமங்களைச் சார்ந்த 500 ஏக்கர் பாசன நிலங்கள் வெள்ள காலங்களில் பயிர்கள் சேதமடையாமல் தடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தாசில்தார் சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் சி.திலீபன், செயற்பொறியாளர்கள் வை.வேல்முருகன், எம்.இளங்கோ, ஆர்.ஐயம்பெருமாள், எம்.ஜி.ராஜேந்திரன், எஸ்மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் ஜி.சரவணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான துவக்க விழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 299 பணிகள் 1315 கிலோமீட்டர் தூரம் ரூ.26.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடைமடை பகுதி வரை தண்ணீர் தடையின்றி சென்று சேர வேண்டும் என்பதற்காக தற்போது பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு வந்து அமைக்கப்படுகிறது. வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் இதில் உள்ளனர். பணிகள் எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்கப்படும் என்ற அனைத்து தகவல்களும் தகவல் பலகையில பொறிக்கப்பட்டிருக்கும். மேட்டூர் அணை திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என்ற இலக்கோட தான் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்றார்.
தூர்வாரும் பணிகள் குறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், இன்று தமிழகத்திற்கு 125 கோடி ரூபாய் நிதி சிறப்பு தூர்வாரும் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைமடை பாசனப் பகுதி வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த தூர்வாரும் சிறப்பு தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தப்பணிக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வருகின்ற ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இந்தப் பணிகளை முடித்து, விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு தூர்வாரும் பணிக்கு உடனடியாக நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்த முதல்வருக்கும், நீர்வளத்துறை அமைச்சருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் டெல்டாவில் தூர்வாரும் பணி நடைபெறுகின்றது. அதற்கான நிதியையும் அரசு ஒதுக்குகிறது. இந்தத் தூர்வாரும் பணி நடைபெறுவதை கண்காணிக்க அந்தந்தப் பகுதிகளில் விவசாயிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து பணிகளை மேற்பார்வை செய்தால் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெறும். கடைமடை வரை முழுமையாக தூர்வார வேண்டும். அப்போதுதான் குறுவை சாகுபடி முறையாக நடைபெறும். அதிகாரிகளால் மட்டுமே இதை கண்காணிப்பு செய்ய முடியாது. எனவே விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றார்.























