சிங்கப்பெண் அதிரடி படையினரிடம் புகார் தெரிவித்த மாணவி: போக்சோவில் கைதான வாலிபர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாணவியிடம் ஆபாச முறையில் நடந்து கொண்ட வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் அபிராமி, ஜோஸ்பின் சிசாரா, போலீசார் தீபா, சிவசங்கரி, கவுசல்யா, அனிதா ஆகியோர் கும்பகோணம் உள்ளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மாணவிகள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாரிடம் தயக்கமின்றி தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சிங்கப்பெண் அதிரடி போலீசாரிடம் புகார் ஒன்றை கூறினார். அதில் தன் தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் பராமரிப்பில் இருந்து வருவதாகவும், வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவர் தன் முன்னால் ஆபாச செயல்கள் செய்வதாகவும் புகார் கொடுத்தார்.
இதே போல் 11-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி ஒருவர் போலீசாரிடம் தெரிவித்த புகாரில், குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை தனது தாயை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் தாயின் உறவினரான ஒருவர் தனக்கும், தனது தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதனை தாயிடம் கூறியதால் தாய் அந்த பகுதியை விட்டு வேறு இடத்திற்கு அழைத்து வந்துவிட்டார். என்று கூறினார்.
உடனே சிங்கப்பெண் அதிரடி படை போலீசார் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து 11-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச செய்கை செய்து, பாலியல் தொல்லை கொடுத்த கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் தீபக்(19) என்பவரை கைது செய்தனர். மேலும் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















