ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
அத்தியாவசியப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தஞ்சாவூர்: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். கடத்தல், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனைக்கு எதிராக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க பொதுமக்களுக்கு இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஜெகதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
பொதுமக்களின் நலனுக்காக அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் முறைகேடாக வேறு வழிகளில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரியும், காவல் ஆய்வாளருமான ஜெகதீஸ்வரன் தலைமையில் சிறப்பு காவல் குழுக்கள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றன.
அதிரடி ஆய்வில் அதிகாரிகள்
அதிகாரிகள் ரேஷன் கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நெல் சேமிப்பு கிடங்குகள், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் சிறப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான சட்ட நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் கூறுகையில், "ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பொருட்களின் அளவுக்கு ஏற்ப வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து இதே குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையானால் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்," என்று எச்சரித்தார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாக தெரிவிக்கும்படி, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச புகார் எண் இடம்பெற்ற விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரேஷன் அரிசி கடத்தல், சிலிண்டர் பதுக்கல் அல்லது இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம்
பொதுமக்கள் அளிக்கும் அனைத்து புகார்களும் முழுமையான ரகசியத்துடன் கையாளப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் எந்த நிலையிலும் வெளியிடப்படாது என்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அச்சமின்றி சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் வழங்க முன்வர வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அரசின் மானியப் பொருட்கள் மக்களுக்கே சென்றடைய வேண்டும். அரசு மானியத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் உண்மையான பயனாளிகளுக்கே சென்றடைய வேண்டும் என்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, ரேஷன் பொருட்களை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















