தஞ்சாவூர் அருகே 8ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் தூய்மை கேள்விக்குறி
சரியான பராமரிப்பு இல்லாததால் மேம்பாலத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்படுகின்றன. மேம்பாலத்தில் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்குக் காரணம்

தஞ்சாவூர்: தஞ்சை – திருவையாறு பைபாஸ் சாலையில் 8-ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் செடிகள் முளைத்தும், குப்பை கூளங்களால் அசுத்தமாகவும் காணப்படுகிறது. மேலும் திருவையாறில் இருந்து இரவு நேரத்தில் தஞ்சைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுக்காக இடதுபுறம் ஒதுங்கினால் குப்பைகளால் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.
உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 கட்டமாக பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து தொடங்கி மாதாக்கோட்டை, விளார், வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8-ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறைவடையும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2-வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்து செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்கும் வகையில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் – திருவையாறு பைபாஸ் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு செல்கின்றன. இந்த பைபாஸ் சாலையில் 8ம் நம்பர் கரம்பை பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பைபாஸ் சாலையாக இருப்பதால் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் 8ம் நம்பர் கரம்பை மேம்பாலம் பகுதியில் இளநீர் மட்டைகள், ஜல்லிகள் மற்றும் செடிகள் பரவி கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் திருவையாறில் இருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பின்னால் வரும் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு இடதுபுறம் ஒதுங்கினால் இந்த குப்பைகளால் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் சரியான பராமரிப்பு இல்லாததால் மேம்பாலத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்படுகின்றன. மேம்பாலத்தில் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பாலத்தின் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் குப்பைகள் மற்றும் செடிகளை அப்புறப்படுத்தி மேம்பாலத்தில் காணாமல் போன ரிப்ளக்டர்களை பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சை-திருவையாறு பைபாஸ் கரம்பை மேம்பாலத்தில் நிலவும் மோசமான நிலை, பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேம்பாலத்தைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















