திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆர்சுத்திப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலியானார். மற்றொரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சுமார் 40 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 100 டன்னுக்கும் அதிகமான நெல்முட்டைகள் ஒவ்வொரு அடுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த குடோனில் நேற்று காலை வழக்கம் போல் தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அடுக்கில் இருந்த நெல்முட்டைகள் திடீரென சரிந்து விழ தொடங்கின. ஒவ்வொரு மூட்டைகளாக விழுந்தவை தொடர்ந்து சரசரவென்று நெல் மூட்டைகள் விழத் தொடங்கியது. நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த பகுதியில் வேலை பார்த்து கொண்டு இருந்த பணியார்கள் இதை பார்த்து அச்சத்தில் ஓட ஆரம்பித்தனர். இருப்பினும் ஆர்சுத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு (56), சகுந்தலா ஆகியோர் மீது நெல் மூட்டைகள் அடுத்தடுத்து விழுந்தது.
மூட்டைகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு இருவரும் மூச்சுவிட சிரமப்பட்டனர். இதில் சின்னப்பொண்ணு மூச்சுத்திணறி பலியானார் . சகுந்தலாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்ற பணியாளர்கள் காயமடைந்த சகுந்தலாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்
ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சின்னபொண்ணு பலியாகி உள்ளார். மேலும் அவருடன் பணியாற்றிய சகுந்தலா என்பவர் காயத்துடன் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இதே போன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேங்கியுள்ளது. உடனடியாக உயிரிழந்த சின்னப்பொண்ணு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகுந்தலாவிற்கு உரிய சிகிச்சையும் இழப்பீடும் வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல் ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பலியான சின்னப்பொண்ணு குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ஆர்சுத்திப்பட்டு சம்பவத்தில் இறந்த சின்னப்பொண்ணு குடும்பத்திற்கு எங்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தற்காலிக பணியாளராக பணியாற்றி அவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக அளிக்க வேண்டும். மேலும் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வெகு மாதங்களாக தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















