பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு 'நோ'… ரஜினி கருத்து அவரது கருத்து வைகோ கொடுத்த 'நச்' பதில்!
மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார். முன்னதாக, முனைவர் எஸ். உதயகுமார் வரவேற்றார். வழக்குரைஞர் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினார்.

தஞ்சாவூர்: மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தையும், மும்மொழித் திட்டத்தையும் இப்போதைய தமிழக அரசு ஏற்கக்கூடாது. ரஜினி கூறிய கருத்து அவருடைய கருத்து. ஒருவர் சொன்ன கருத்தை ஆதரித்தோ - மறுத்தோ பேசுகிற வழக்கம் என்றைக்கும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற கல்விக் காவலர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையாரின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ. விஜயராகவன், கைத்தறித் துறை ஓய்வு பெற்ற துணை இயக்குநர் டி.எஸ்.கே. இராஜசேகர், மதிமுக தெற்கு மாவட்டச் செயலர் வி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.
இதில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார். முன்னதாக, முனைவர் எஸ். உதயகுமார் வரவேற்றார். வழக்குரைஞர் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி நடத்த வேண்டும் என விரும்புகிறேன். மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
அதே நிலைப்பாட்டைத்தான் இந்த அரசும் பின்பற்றும் என நம்புகிறேன்; பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும். நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு முந்தைய தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இருக்கின்றன.
அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி மத்திய அரசு திணித்துக் கொண்டே வருகிறது. நீட் தேர்வுக்கு 22 லட்சம் மாணவர்கள் தயாரான நிலையில் கேள்வித் தாள் வெளியாகி, அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















