குறுவை சாகுபடி கேள்விக்குறியா? மேட்டூர் அணை நிலவரத்தால் டெல்டா விவசாயிகளிடையே நீடிக்கும் எதிர்பார்ப்பு!
குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் முகம் மாற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் குறுவை சாகுபடிக்கான காலம் நெருங்கி வரும் வேளையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாகச் சரிந்திருப்பது டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் கவலையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் மாதம் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் போதிய மழையின்மையாலும், கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய உரிய தண்ணீர் வரத்து இல்லாததாலும் அணையின் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்படுமா அல்லது மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் அரசு சார்பில் செய்யப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பிலும், ஏக்கத்திலும் ஒட்டுமொத்த தமிழக டெல்டா விவசாயப் பெருங்குடி மக்களும் காத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) ஆண்டு தோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டாலும் குறுவை சாகுபடி முக்கிய இடத்தைப்பெறுகிறது. இதற்காக வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, குறுவை சாகுபடிக் காக காவிரி நீர் திறந்துவிடப்படும்.
குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். குறுவை பட்டத்தில் பெரும்பாலும் குறுகிய காலத்தில் விளையும் 90 முதல் 110 நாட்கள் கொண்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பம்புசெட் மோட்டார் மூலம் சாகுபடிகள் நடைபெற்று வந்தாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காவிரி நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 78 அடியாகவும், நீர் இருப்பு 41 டி.எம்.சி.யாகவும் மட்டுமே உள்ளதாக கூறப் படுகிறது.
வழக்கமாக அணையை திறக்க 100 முதல் 110 அடி வரை நீர்மட்டம் இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 60 முதல் 70 டிஎம்சி வரை நீர் இருப்பு தேவைப்படும் என்றும் நீர்வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி ஜூன் 12ம் தேதி திட்டமிட்டபடி அணை திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு முன்கூட்டியே தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணை திறக்கும் தேதி உறுதியாக அறிவிக்கப்பட்டால், அதற்கேற்ப விதைப்பு, நில தயார் பணிகள் மற்றும் உரம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளை திட்டமிட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1.37 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 3.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சாகுபடிகள் பெரும்பாலும் காவிரி நீரை சார்ந்துள்ளதால், மேட்டூர் அணை நீர்திறப்பு டெல்டா விவசாயத்தின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக தூர்வாரும் பணிகளையும் முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு தூர்வாரும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் துரித நடவடிக்கை எடுத்து, நீர்வள மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களும், விவசாய அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















