செயற்கை !நுண்ணறிவு புத்தாக்கம் குறித்த சர்வதேச திட்ட மேலாண்மை நிபுணர்கள் மாநாடு
"செயற்கை நுண்ணறிவு (AI), புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை மூலம் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குதல்" என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும்.

தஞ்சாவூர்: திட்ட மேலாண்மை அசோசியேட்ஸ் (PMA இந்தியா) மற்றும் சர்வதேச திட்ட மேலாண்மை சங்கம் (IPMA) இணைந்து ‘சர்வதேச திட்ட மேலாண்மை நிபுணர்கள் மாநாடு 2026’ மாமல்லபுரத்தில் நடந்தது.
"செயற்கை நுண்ணறிவு (AI), புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை மூலம் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குதல்" என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். சர்வதேச நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகளாவிய திட்டச் செயல்பாடுகளின் எதிர்காலம் குறித்து இதில் விவாதித்தனர் .
தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். IPMA தலைவர் முனைவர் மிலடன் வுகோமனோவிக் தொடக்க உரையாற்றினார். PMA இந்தியா தலைவர் முனைவர் ஏ. சிவதாணு பிள்ளை வரவேற்புரை ஆற்றினார். ‘தி ஹிந்து’ குழும இயக்குநர் என். ராம் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், திட்டங்களைத் தீட்டுவதை விட அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவதே இந்தியாவின் முக்கிய சவால் என்றார். இந்த இடைவெளியைக் குறைக்கத் திட்ட மேலாண்மை ஒரு பாலமாக அமைய வேண்டும். AI மற்றும் துல்லியமான தரவுத்தளங்கள் மூலம் அரசுத் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும். முடிவுகளை ஊகங்களின் அடிப்படையில் எடுக்காமல், முறையான ஆதாரங்களுடன் கூடிய நிர்வாகமாக மாற்ற வேண்டும். எதிர்காலக் கல்விமுறை குழந்தைகளுக்கு நிர்வகிக்கும் திறனைக் கற்றுத் தருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முனைவர் மிலடன் வுகோமனோவிக் தனது உரையில் திட்டங்களின் வெற்றி என்பது வெறும் நேரம் மற்றும் பட்ஜெட்டை மட்டும் சார்ந்தது அல்ல; அது சமூகத்தில் ஏற்படுத்தும் நீண்டகாலத் தாக்கத்தைப் பொறுத்தது என்றார். தொழில்நுட்பத் திறனுடன் தலைமைப்பண்பு மற்றும் அறநெறிகளும் ஒரு மேலாளருக்கு அவசியம். AI வளர்ந்தாலும், மனிதர்களின் முடிவெடுக்கும் திறனும், பிறரை ஒருங்கிணைத்துச் செல்லும் குணமுமே இத்துறையின் உயிர்நாடி என அவர் குறிப்பிட்டார்.
முனைவர் ஏ. சிவதாணு பிள்ளை: 2047-க்குள் இந்தியாவை முழுமையான வளர்ந்த நாடாக மாற்றத் திட்ட மேலாண்மை இன்றியமையாதது என்றார். விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையைப் போலவே, காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி போன்ற பெரிய சவால்களைச் சமாளிக்க 'இலக்கு சார்ந்த' மேலாண்மை முறை தேவை. இந்தியா மற்ற நாடுகளின் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதை விடுத்து, சொந்தமாக உருவாக்கி உலக நாடுகளுக்குத் தலைமை தாங்க வேண்டும். AI மற்றும் IoT மூலம் திட்டங்களை இன்னும் துல்லியமாகச் செயல்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் முனைவர் எஸ். சோமநாத், விண்வெளி ஆராய்ச்சிகள் நாட்டின் கண்டுபிடிப்புத் திறனை எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பது குறித்து உரையாற்றினார். திரு. ரோபர்டோ மோரி, சுரங்கத் துறையில் நீடித்த மேலாண்மைத் தீர்வுகள் குறித்துப் பேசினார்.
சிறப்பாகச் செயல்பட்ட என்எல்சி இந்தியாவிற்கு ‘IPMA Delta’ சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் கௌரவப் பட்டங்களும் வழங்கப்பட்டன. IPMA-வின் முதன்மைச் செயல் அதிகாரி திருமதி லாரா லசைட் நன்றியுரை வழங்கினார்.
PMA இந்தியா சர்வதேச அமைப்பான IPMA-வின் இந்தியக் கிளையாகச் செயல்படும் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். இது திட்ட மேலாண்மைத் துறையில் சான்றிதழ் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. IPMA: சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு 1965-ல் தொடங்கப்பட்ட உலகின் முதல் திட்ட மேலாண்மை அமைப்பு இதுவாகும். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்டு இது சர்வதேசத் தரங்களை நிர்ணயிக்கிறது.























