இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அமையும்...வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியது என்ன?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது மாநில மாநாடு வருகின்ற மே மாதம் 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்: திருவாரூரில் நாளை 5ம் தேதி நடக்கும் மாநாட்டிற்கு வணிகர் விழிப்புணர்ச்சி எழுச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வியாபாரிகளுக்கு எந்த ஒரு சலுகையும் இல்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது மாநில மாநாடு வருகின்ற மே மாதம் 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ‘வணிகர் விழிப்புணர்ச்சி எழுச்சி மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 42 மாநாட்டை காட்டிலும் இந்த 43-வது மாநாடு மிக சிறப்பாக நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடு பணிகளும் நடந்து வருகிறது.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு அமையும். ஏப்ரல் 5-ந்தேதி கால்கோள் நிகழ்ச்சி மாநாட்டு திடலில் நடைபெறுகிறது. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து வணிகர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.
மாநாடு நடைபெறும் திடலுக்கு பேரமைப்பின் கட்டமைப்பை உருவாக்கிய சிவசுந்தரம் பெயரும், மாநாட்டு நுழைவு வாயிலுக்கு நாகை மாவட்டத்தின் முன்னாள் தலைவர் கே.நடராஜன் பெயரும் சூட்டப்பட உள்ளது. சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் வணிகர்கள் தங்கள் குடும்பத்தோடு இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மத்திய பட்ஜெட்ஜை தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக தாக்கல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் வணிகர்களைப் பொறுத்தவரை இது ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நான்கு அடுக்குகளாக இருப்பதை இரண்டு அடுக்குகளாகக் மாற்றி இருக்கிறார்கள். அதனை ஒரு அடுக்காக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்கள் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சாதாரண வணிகர்களும் எளிதில் கையாளும் வகையில் ஜிஎஸ்டி சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல், வருமான வரி விலக்கு வரம்பை 15 லட்சமாக உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் நடக்கவில்லை. இது குறித்து மீண்டும் டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளோம்.
தேர்தல் நேரங்களில் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு 50,000 ரூபாய் என்ற வரம்பு மிகக் குறைவாக உள்ளது. இதை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மேலும், முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் வணிகர்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், பறிமுதல் செய்யப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். வருகின்ற தேர்தலில் வணிகர்களின் நிலைப்பாடு குறித்து மாநாட்டின் போது ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுக்கும். வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படும் தரப்பிற்கே எங்கள் ஆதரவு இருக்கும்.
கரூர் மாவட்டம், குளித்தலை கிருஷ்ணராயபுரம் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறி நடத்தப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதும் வணிகர் சங்க பேரமைப்பு உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















