கவுன்சிலர்களுக்கு சம்பளம் உண்டா? குடிநீர் பிரச்சனை முதல் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் இதோ!
குப்பை, குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்று வார்டு கவுன்சிலர்களிடம்தான் போய் நிற்க வேண்டியுள்ளது. அவர்களால்தான் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டு வரமுடியும். கவுன்சிலர்கள் சம்பளம்

தஞ்சாவூர்: அண்ணே கவுன்சிலர் அண்ணே... குடிதண்ணீர் வரவே இல்ல. உன்னை ஜெயிக்க வைச்சுட்டு தண்ணீக்கு கூட நாங்க அலையணுமா என்று மக்கள் கேள்வி கேட்கும் கவுன்சிலர்களுக்கு சம்பளம் என்று உண்டா. இந்த கேள்வி ஏராளமானவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் சீரான செயல்பாட்டிற்கு முதன்மையான இடத்தில் உள்ளன. அதிலும் கவுன்சிலர்கள் என்பவர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். மக்களால் தேர்வு செய்யப்படும் இவர்களுக்கு கடந்த 2023-ம் ஆண்டு முன்பு வரை ஒரு ரூபாய் கூட சம்பளம் என்பது கிடையாது. அட ஆமாங்க. அதுதான் உண்மை, அவர்களுக்கு 2023ம் ஆண்டில்தான் மாத சம்பளம் என்பது கொண்டு வரப்பட்டது. உங்களால் நம்ப முடிகிறதா? முடியலை இல்ல.
உங்கள் வார்டிற்கு நீங்கள் தேர்வு செய்து செயலாற்றி வரும் கவுன்சிலருக்கு ஒரு மாதம் சம்பளம் எவ்வளவு இருக்கும் என நீங்கள் யோசித்தது உண்டா? அவங்களுக்கு என்னங்க... ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று நினைத்தால் உங்கள் நினைப்புக்கு பல்புதான். உங்கள் பகுதியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலில் அணுகும் நபராக உள்ளவருக்கு 2023-ம் ஆண்டில்தான் மாத சம்பளம் என்பதே தொடங்கப்பட்டது.
அந்த வகையில், மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களின் சம்பளம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஏரியாவில், தெருவில் ஏதாவது பிரச்சனை என்றால் நாம் முதலில் அணுகும் நபர் வார்டு கவுன்சிலராகதான் இருந்து வருகிறார். தெரு விளக்கு பிரச்சனையில் ஆரம்பித்து, குப்பை அள்ளாதது, குடிநீர் வராதது என்று சின்ன...து... முதல் பெரிய......து... வரையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்று வார்டு கவுன்சிலர்களிடம்தான் போய் நிற்க வேண்டியுள்ளது. அவர்களால்தான் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டு வரமுடியும். மக்களுக்கு குறைதீர்ப்பது மட்டுமின்றி, தேவையானவை என்னென்ன என்பதையும் தலைமைக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்திலும் கவுன்சிலர்கள் உள்ளனர். எம்.பி, எம்.எல்.ஏ -க்கள் அணுகுவதை விட கவுன்சிலர்களை சட்டென்று பார்த்து விடலாம். உடனே அணுகி பிரச்சினைகளை எளிதாக தெரிவித்து கொள்ளலாம்.
பெரும்பாலும் கவுன்சிலர்கள் என்பவர்கள் அப்பகுதியிலேயே வசிப்பவர்களாக இருப்பார்கள். அதனால், அந்த வார்டில் வசிக்கும் மக்களுக்கு நன்கு அறிமுகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மக்களுடன் மக்களாக இருந்து அரசு திட்டங்களை செயல்படுத்தும் நபர்களாக கவுன்சிலர்கள் இருந்து வருகின்றனர். இந்த பணிக்கு நேரம் காலம் என்பது எப்போதும் கிடையாது. இயற்கை பேரிடர் காலங்களில் பல கவுன்சிலர்கள் விடிய, விடிய மக்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றிய சம்பவங்களும் உண்டு.
தமிழ்நாட்டில் செயலாற்றும் கவுன்சிலர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கு முன்பு வரை மாத சம்பளம் கிடையாது. கவுன்சிலருக்கு மட்டுமில்லை, மேயர்களுக்கும் சம்பளம் கிடையாது. மாதம் ஒரு முறை கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பங்கேற்க ரூ.800 மற்றும் மண்டல அளவிலான கூட்டத்தில் பங்கேற்க ரூ.50 மட்டுமே வழங்கப்பட்டது. அதன்படி, ஒரு மாதத்திற்கு அரசு தரப்பில் இருந்து ரூ.850 வரையே ஒரு கவுன்சிலர் பெறுவார்.
எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் போன்று கவுன்சிலர்களுக்கும் மாத சம்பளம் வழங்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சம்பளம் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து, 2023-ம் ஆண்டு தொடக்கமே இதற்கான முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்தது. அதன்படி கவுன்சிலர்களின் கோரிக்கை ஏற்று, மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்களுக்கு மாத சம்பளம் உண்டு என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டது.
மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.10,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதியம் ஆகும். இதுவே நகராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ.15,000, துணை தலைவர்களுக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் துணை தலைவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தங்களுக்கான சொந்த செலவுகள் மட்டுமின்றி, வார்டு பணிக்காக செல்லும்போதும் செலவுகளை தாங்களே ஏற்கும் நிலையில் கவுன்சிலர்கள் இருந்தனர். இந்த அறிவிப்பிற்கு பின்னர், அவர்களின் பணி காலம் வரை மாதம் ஊதியம் என்பது நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.























