வெப்பமும் குறட்டை நோயும்... மாடு வளர்ப்போருக்கு இரட்டைச் சவால்: தீர்வு என்ன?
மூக்கில் வடியும் சீழ் மற்றும் சாணத்தை கால்நடை நோய் பரிசோதனை மையத்தில் பரிசோதித்து, நோயை உறுதிசெய்ய முடியும். கோடை காலங்களில் இந்த நோய் வராமல் தடுப்பது முக்கியமாகும்.

தஞ்சாவூர்: கோடை காலம் வந்து விட்டாலே கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக மாடுகள் வளர்ப்பவர்களுக்கு பால் உற்பத்தி குறைதல் என்பது மிகப்பெரிய பிரச்சினை ஆகும். இதற்கு காரணம் மாடுகளில் பரவும் 'குறட்டை நோய்' என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலங்களில் நீர் தட்டுப்பாடு காரணமாக மாடுகள் ஒரே குளம் நீரைப் பயன்படுத்தும் போது குறட்டை நோய் (மூக்குப்புழு நோய்) பரவும் அபாயம் அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, மாடுகளைப் பாதிக்கும் 'குறட்டை நோய்' எனப்படும் மூக்குப்புழு நோய் தாக்குதல் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய் மாடுகளின் சுவாசப் பாதையைத் தாக்கி, நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடைகாலத்தில் நீர் நிலைகள் வற்றி வருவதால், கால்நடைகள் அனைத்தும் பொதுவான ஓரிடத்தில் நீர் அருந்தும் சூழல் ஏற்படுகிறது. இந்நோய் நேரடியாகப் பரவாமல், ஒரு சுழற்சி முறையில் பரவுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சாணத்தில் உள்ள முட்டைகள் நீரில் கலந்து, அங்குள்ள நத்தைகளில் தங்கிப் புழுக்களாக வளர்கின்றன. மாடுகள் அந்த அசுத்தமான நீரைக் குடிக்கும்போது, இப்புழுக்கள் தோல் அல்லது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைகின்றன. பின்னர் ரத்த ஓட்டத்தின் வழியாகப் பயணம் செய்து, இறுதியாக மூக்கின் உட்பகுதியைச் சென்றடைந்து பாதிப்பை உண்டாக்குகின்றன.
மாடுகளில் குறட்டை நோய் ஆரம்பத்தில் சாதாரண சளி போன்ற தொற்றுக்குறியுடன் தோன்றும். பின்னர் தொடர்ந்து மூக்கில் நீர் வடிதல், சீழ் அல்லது ரத்தம் கலந்த சளி வடிதல், மூக்கில் துர்நாற்றம், சுவாசிக்க சிரமம், மூச்சு விடும்போது குறட்டை போன்ற சத்தம், மூக்கின் உட்பகுதியில் சதை வளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணப்படும். சில நேரங்களில் சதை வளர்ச்சி மூக்குத்துவாரத்தில் அடைப்பு ஏற்படுத்தி தீவனம் சரிவர உண்ணாமை, உடல் எடை குறைதல், பால் உற்பத்தி குறைவு, சோர்வு மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
மாடுகளுக்கு ஏற்படும் அறிகுறிகளின் மூலம் மற்றும் மூக்குப் பகுதியை மருத்துவ பரிசோதனை செய்து, மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதை கண்டறியலாம். மூக்கில் வடியும் சீழ் மற்றும் சாணத்தை கால்நடை நோய் பரிசோதனை மையத்தில் பரிசோதித்து, நோயை உறுதிசெய்ய முடியும். கோடை காலங்களில் இந்த நோய் வராமல் தடுப்பது முக்கியமாகும். மாடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். நீர் தேங்கி இருக்கும் குளங்கள் மற்றும் குட்டைகளில் மாடுகளை நீர் குடிக்க விடக்கூடாது.
குளங்களில் நத்தைகளை கட்டுப்படுத்த சுண்ணாம்பு தூளை பயன்படுத்தலாம். கோடை காலங்களில் மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். கோடைகாலத்தில் இந்நோய் பரவாமல் தடுக்கப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தட்பவெப்பநிலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவையே இந்நோய் பரவ முக்கியக் காரணிகளாக இருக்கிறது. எனவே கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாடுகள் பராமரிப்பில் செய்யப்படும் சிறு தவறுகள் கூட அவற்றை வெகுவாக பாதித்து விடும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு கால்நடைத்துறை அளிக்கும் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Before You Go
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
ட்ரெண்டிங் செய்திகள்






















