தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்றால் அது தமிழகம்தான் என்று தமாகா தலைவர் வாசன் தஞ்சாவூரில் தெரிவித்தார்

தஞ்சாவூா்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து தஞ்சையில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பிரச்சாரம் செய்து பேசினார்.
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டம் நம்முடைய கோட்டையாக மாற வேண்டும். மீண்டும் தமிழகத்திலே நல்லாட்சி அமைய வேண்டும். மத்திய மாநில அரசினுடைய ஒத்தக் கருத்தின் அடிப்படையிலே தமிழகம் வளர வேண்டும்.சிறக்க வேண்டும். உயர வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்திலே அ.தி.மு.க முதல் அணியாகத் திகழும் என்பதை நான் நம்புகிறேன். தமிழகத்தினுடைய முதல் கட்சி, வெற்றிக் கட்சி அ.தி.மு.க என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
நம்முடைய பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா கட்சி மற்றும் நம்மை ஆதரிக்கின்ற அத்தனை கூட்டணிக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தஞ்சை சட்டமன்றத்திலே நாம் வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தன்னுடைய 14-வது வயதிலே பொது வாழ்விற்கு வந்தவர். 27-ம் வயதிலே ஒன்றிய கவுன்சிலராகச் செயல்பட்டவர். மாவட்ட கவுன்சிலராகச் செயல்பட்டவர். இன்றைக்கு தமிழகத்தினுடைய பாஜக-விலே மூத்த தலைவர்கள் வரிசையிலே, முதல் வரிசையிலே அமரக்கூடிய தலைவராக நம்முடைய முருகானந்தம் இருக்கிறார்.
எடப்பாடியாரின் அன்பைப் பெற்றவர். டி.டி.வி. தினகரன் ஆதரவைப் பெற்றவர். நம் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் அன்பை பெற்றவர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நேரடிப் பார்வையிலே இருப்பவர் கருப்பு முருகானந்தம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. கருப்பு முருகானந்தத்தின் வெற்றி தஞ்சையினுடைய வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள்.
நம்முடைய மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் மண்ணிலே நாம் நூற்றுக்கு நூறு வெல்ல வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு இன்றைக்கு காலையில் தஞ்சை, மாலையில் கும்பகோணம் கோயில் நகரத்திலே என்னுடைய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன்.
இந்த வெற்றிச் சுற்றுப்பயணத்தினுடைய முடிவு தமிழகத்திலே ஆட்சி மாற்றம். மக்கள் விரோத தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்றால் அது தமிழகம்தான் என்று வாக்காளர்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ரயிலடி பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான நித்யாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் தஞ்சை பகுதியின் பல இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.























