நிலுவை ஊதியத்தை உடன் வழங்க வேண்டும்... 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை
உயிர்காக்கும் உன்னத பணியை குறைந்த ஊதியத்தில் மனதிற்கு நிறைவாக உழைத்து வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் 27 ஆம்புலன்சுகள் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்: எங்களது தொழிற்சங்கம் போராடி கொண்டிருப்பதால் தற்போது மாதாந்திர சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஜனவரி மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: உயிர்காக்கும் உன்னத பணியை குறைந்த ஊதியத்தில் மனதிற்கு நிறைவாக உழைத்து வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் 27 ஆம்புலன்சுகள் இயக்கப்படுகின்றன. அதில் ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். எங்களுக்கு ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
108 ஆம்புலன்ஸ் சேவையின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய தொழிலாளர்களை சேவையை விட்டு அவர்களாகவே வெளியேறும் நிலையை உருவாக்கிறது. இதை எதிர்த்து எங்களது தொழிற்சங்கம் போராடி கொண்டிருப்பதால் தற்போது மாதாந்திர சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஜனவரி மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொருளாளர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கார்த்திக், முன்னாள் மாநில பொருளாளர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், வரையறுக்கப்பட் ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் கிராம உதவியாளர்கள் தஞ்சை-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்தனர். உடனே இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கிராம உதவியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலுக்கு முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.























