விஜய் பேச்சு வெறும் சில்லறை ஓசை! உதயநிதியிடம் பயிற்சி பெற வேண்டும்! சபாபதி மோகன் பரபரப்பு பேச்சு!
அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டாம். அங்கு கூட்டணிக்குள்ளே கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியிடம் அன்புமணி பேசுகிறார். ஒரு கூட்டணிக்கு ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும்.

விழுப்புரம்: சில்லறைகளின் வெற்று ஓசை தான் விஜயின் பேச்சு. கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் விஜய் பேசியது வெறும் 82 நிமிடங்கள் தான், கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை உதயநிதியை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கூட்டு சாலையில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி. திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய சபாபதி மோகன்.
சில்லறைகளின் வெற்று ஓசை தான் விஜயின் பேச்சு. கடந்த மூன்று ஆண்டுகளில் விஜய் மொத்தமாக பேசியது 82 நிமிடங்கள் தான். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் போட்டியிடவில்லை நேராக முதல்வர் இருக்கை தான் அவருக்கு (விஜய்) வேறு எதுவும் வேண்டாம். வடமாநிலங்களில் நூறு தேவாலயங்கள் தாக்கப்பட்ட போது விஜய் போராடவில்லை, அறிக்கை வெளியிடவில்லை. 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31-ஆக குறைக்கப்படுவதற்கு விஜய் குரல் கொடுத்தாரா. கட்சியை ஆரம்பித்து எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதயநிதி ஸ்டாலினிடம் நீங்கள் (விஜய்) பயிற்சி எடுக்க வேண்டும். நாங்கள் ஆன்மீகத்தையும் விட்டுவிடவில்லை.
திமுக கடவுள் இல்லை என்று சொல்கிற இயக்கம் இல்லை. கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அண்ணன், தம்பியாக வாழ வேண்டும் என சொல்கிற பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை தலைமையேற்றிருக்கிற இயக்கம் திமுக. தமிழ்நாடு என்று சொன்னால் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வருகிறது. அந்த துரோகத்தை முறியடிக்க வேண்டும். அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டாம். அங்கு கூட்டணிக்குள்ளே கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியிடம் அன்புமணி பேசுகிறார்.
ஒரு கூட்டணிக்கு ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும். பியூஸ் கோயலிடம் தினகரன் பேசுகிறார். திமுக குழு அமைக்கவுள்ளது குழுவிடம் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். திமுக கூட்டணிகள் ஒரு தலைமை தான் உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு பணம் கொடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் நம்மை பார்த்து ஊழல் என்று பேசுகிறார்.























