TN Weather Update: தமிழ்நாட்டில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு; எந்தெந்த மாவட்டங்கள்.? - வானிலை மையம் கூறியது என்ன.?
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எந்தெந்த மாவட்டங்களில் கனமழை என்பதையும் தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் அக்டோபர் 3-ம் தேதி, ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் கணிப்புகளை தற்போது பார்க்கலாம்.
வானிலை மைய அறிக்கை கூறுவது என்ன.?
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 40 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.?
தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3-ம் தேதி வரை மிதமான மழை
நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை என்ன.?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், இன்றும், நாளையும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 29-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில், மணிக்க 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மேற்சொன்ன தேதிகளில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





















