CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
100 நாள் வேலை திட்டத்திற்கான பெயரை மத்திய அரசு மாற்றியுள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலமைச்சரின் கண்டனப் பதிவு என்ன.?
மத்திய பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிதவில், “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!
- தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
- 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
- இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!
- பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
#ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!“ என முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் வேலை திட்டம் குறித்து வெளியான தகவல் என்ன.?
நாட்டின் முதன்மையான வேலைவய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை, மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக, வளர்ந்த - வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன் எனும் சட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக VB - G RAM G BILL, 2025 எனும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
புதிய மசோதா என்ன சொல்கிறது.?
இந்த புதிய சட்டம், "2047-ம் ஆண்டு வளர்ந்த பாரதம் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை நிறுவும். மேலும், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊதியத்துடன் கூடிய 125 நாட்கள் வேலைவாய்ப்பிற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கும். பொதுப்பணிகள் மூலம் அதிகாரமளித்தல், வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது வளர்ந்த பாரதத்திற்கான தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அடுக்கை உருவாக்கும். நீர் தொடர்பான பணிகள், முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கான சிறப்புப் பணிகள் மூலம் நீர் பாதுகாப்பில் கருப்பொருள் கவனம் செலுத்தும்" என தகவல்கள் தெரிவிக்கின்றன.





















