CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுகவிற்கு நன்றி தெரிவித்தார். அது எதற்காக என்று தெரியுமா.?

சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று மானியக் கோரிக்கையின் போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து விளக்கமளித்தார். அப்போது, அதிமுகவிற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து விளக்கம்
பேரவையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2026-ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக, இந்தியாவிலேயே முதன் முதலாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில், கடந்த 14.02.2024 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார்.
தொடர்ந்து அடுத்தகட்டமாக, கடந்த 5-ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை 2030-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி அளிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தில் அதற்குரிய அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் கடந்த 22-ம் தேதி சென்னையில் நடைபெற்றதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதில் கலந்து கொண்ட மற்ற மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் குறித்து குறிப்பிட்டார் முதலமைச்சர்.
தொடர்ந்து, அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து குறிப்பிட்ட முதலமைச்சர், 1971-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு, மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படாத வகையில், உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூட்டத்தில் பங்கேற் மாநிலங்களின் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே, கூட்டுக் குழுவின் சார்பாக பிரதமரை சந்தித்து, கடிதம் அளித்து முறையிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் இந்த முன்னெடுப்புக்கு துணை நின்ற தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும், மற்ற கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

