![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்.. பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.. நிகழ்ந்தது என்ன?
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
![ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்.. பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.. நிகழ்ந்தது என்ன? There was a ruckus when people besieged the BJP office over the Arudra Finance Corporation fraud case. ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்.. பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.. நிகழ்ந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/9d0f05068a0c07c9b5538b6a24cd23581681444056865589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இந்த வழக்கில் இதுவரை 11 நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், இயக்குனருமான ஹரிஷை 11 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி இருப்பதும், அந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ஆகியோர் பதவி வாங்கி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்ச்சியாக தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததால் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தொடர்ச்சியாக பாஜகவினர் ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டு வருவதாலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருவதாலும் தங்களை ஏமாற்றியதில் பெரும் பங்கு பாஜகவுக்கு உள்ளது எனவும் அதனால் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையிடம் புகார் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து வருவதாகவும் தங்களது கிராமத்தில் அனைவரும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூபாய் 2.58 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் தங்களை ஆருத்ரா நிறுவனம் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த மோசடியின் பின்புலத்தில் பாஜக இருப்பதாகவும் தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களது பணம் கிடைக்கவில்லை என்றால் விரைவில் ஒரு லட்சம் நபர்களுடன் சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகத்தில், தங்களை ஏமாற்றிய பாஜக நிர்வாகிகளிடம் இருந்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளிக்க முற்பட்டனர். ஆனால், பாஜக அலுவலக நிர்வாகிகள் அக்கோரிக்கை மனுக்களை வாங்காமல் சென்றதால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட வந்த நபர்களும் கலைந்து சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)