கோடைக்கால பயணிகள் நெரிசலை குறைக்க தூத்துக்குடி–தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான கால அட்டவணையை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கோடைக்கால விடுமுறை, திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களின் அதிகமான பயண தேவையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான கால அட்டவணையை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் வண்டி எண் 06018, ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
அதேபோல், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி இயக்கப்படும் வண்டி எண் 06017, ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு முக்கிய இடங்களில் நிறுத்தம் அளிக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 17 எல்.எச்.பி. (LHB) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் அதிகரிக்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சிறப்பு ரயில்கள் மூலம் வழக்கமான ரயில்களில் ஏற்படும் அதிக நெரிசல் குறையும் என்றும், முன்பதிவு செய்ய முடியாமல் தவித்த பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வேலை, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பயணம் செய்யும் மக்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும். கோடை காலத்தில் மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் பயணங்கள் அதிகரிக்கும் நிலையில், இந்த ஏற்பாடு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என கூறப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களை இயக்கியதற்காக தெற்கு ரயில்வேக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இத்தகைய கூடுதல் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
ட்ரெண்டிங் செய்திகள்






















