Mambalam railway station : மாம்பலம் ரயில் நிலையத்தில் இனி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்.! எந்த எந்த ரயில்கள்- தெற்கு ரயில்வே வெளியிட்ட லிஸ்ட்
Mambalam railway station: சென்னையில் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி
தென் மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய ரயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணி காரணமாக கடந்த 4 மாதங்களாக நடைமேடையில் பணியானது நடைபெறுகிறது. இதனால் ராமேஸ்வரம், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தாம்பரத்தில் இருந்தும் ரயில்கள் புறப்படும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில் சேவையில் மாற்றம்
எனவே வெளியூர் செல்லும் பயணிகள் எழும்பூர் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து புறநகர் மின்சார ரயில்கள் பிடித்து தாம்பரம் சென்று வெளியூர் செல்லும் ரயில்களில் ஏறும் நிலையானது உள்ளது. இதனால் தினந்தோறும் புறநகர் ரயில்களில் பயணிக்கும் எண்ணிக்கையை விட கூடுதல் பயணிகள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது 10வது மற்றும் 11வது நடைமேடையில் நடைபெற்று வரும் பணியின் காரணமாக புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிய அளவில் அவதி அடைந்து வருகின்றனர். ரயில்நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகளுக்கு உதவிடும் வகையில், மாம்பலம் ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.
மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்கும்
இது தொடர்பாக தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் பிளாட்பாரம் எண் 10 மற்றும் 11 பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக நேற்று (20.02.2026) முதல் வருகிற 05.04.2026 வரை புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் சிரமம் அடையாத வகையில், வெளியூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை ( 22.02.2026) முதல் 06.04.2026 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை எக்மோர் – திருச்சிராப்பள்ளி சோழன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
- சென்னை எக்மோர் – கன்னியாகுமரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
- சென்னை எக்மோர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ்,
- சென்னை எக்மோர் – செங்கோட்டை பொதிகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
- சென்னை எக்மோர் – திருநெல்வேலி நெல்லை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
- சென்னை எக்மோர் – மதுரை பாண்டியன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
- சென்னை எக்மோர் – மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
- சென்னை எக்மோர் – சேலம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் இந்த தற்காலிக ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















