புதுச்சேரி டூ பெங்களூரு இனி ஈஸி! மே 1 முதல் கூடுதல் விமான சேவை: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை: இண்டிகோ அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு இடையே வான்வழிப் போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பிரபல தனியார் விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), வரும் மே 1-ஆம் தேதி முதல் தனது கூடுதல் விமான சேவைகளைத் தொடங்க உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் மே 1-ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவையைத் தொடங்கவுள்ளது.
இருமுறை இயக்கப்படும் விமானங்கள்:
தற்போது புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்கும் ஒரே நிறுவனமாக இண்டிகோ விளங்கி வருகிறது. ஏற்கனவே பெங்களூரு - புதுச்சேரி - ஹைதராபாத் வழித்தடத்தில் ஒரு விமானம் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை ஈடுகட்டவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் இரண்டு முறை (Frequency) விமானங்களை இயக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புதிய கால அட்டவணை:
புதிய அட்டவணையின்படி, பெங்களூருவில் இருந்து காலை 10:10 மணிக்குப் புறப்படும் விமானம் 11:15 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து காலை 11:35 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதேபோல், மதிய வேளையில் புதுச்சேரியில் இருந்து மதியம் 2:00 மணிக்குப் புறப்படும் விமானம் 3:15 மணிக்கு பெங்களூருவை அடையும். அங்கிருந்து மாலை 4:00 மணிக்குப் புறப்பட்டு 5:10 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்:
இது குறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் கே. ராஜசேகர் ரெட்டி கூறுகையில், "இந்த கூடுதல் விமான சேவை பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக நிமித்தமாகப் பயணிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்.
ஓடுபாதை விரிவாக்கத் திட்டம்:
பெரிய ரக விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக, தற்போதைய ஓடுபாதையை 2,300 மீட்டராக விரிவாக்கம் செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காகத் தமிழகப் பகுதியில் 217 ஏக்கர் மற்றும் புதுச்சேரி பகுதியில் 185 ஏக்கர் என மொத்தம் 402 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்த சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், இந்த கூடுதல் விமான சேவை சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளை இண்டிகோ நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















