![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pongal Cash Gift: பொங்கலுக்கு கொடுக்கும் 1000 ரூபாயை வங்கியில் செலுத்த முடியாதா..? நீதிமன்றம் கேள்வி
பொங்கல் பரிசுத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
![Pongal Cash Gift: பொங்கலுக்கு கொடுக்கும் 1000 ரூபாயை வங்கியில் செலுத்த முடியாதா..? நீதிமன்றம் கேள்வி Pongal Cash Gift 2023 Can Rupees 1000 rupees given for Pongal be paid in bank madurai bench of madras high court questions Pongal Cash Gift: பொங்கலுக்கு கொடுக்கும் 1000 ரூபாயை வங்கியில் செலுத்த முடியாதா..? நீதிமன்றம் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/02/d43cc4049ac969a739660043cbc35a351672660960429571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொங்கல் பரிசு தொகையான ஆயிரம் ரூபாயை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தவது குறித்து தமிழக அரசிடம், நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், வழக்கை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கு :
தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கை தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 20 வகையான விவசாயப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும், வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.
இந்த வேஷ்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.
தரமான பொருட்கள் இல்லை:
கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், அந்த கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடையாமல், பரிசுத்தொகுப்பினை பெறுவோரும் திருப்தி அடையாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். தரமான பொருட்களும் கிடைக்கப் பெற்று, பரிசு தொகுப்பு பெறுவோரும் மகிழ்ச்சி அடைவர்.
இதனை பரிசீலிக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
நீதிபதிகள் கேள்வி:
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவது குறித்து கேட்டனர்.
அதற்கு, அரசு தரப்பில் குறுகிய காலமே இருப்பதால் வங்கி கணக்குகளில் செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பது கடினம். அதோடு மினிமம் பேலன்ஸ் எனக்கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதோடு மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால், அவற்றை பிரிப்பதிலும் சிக்கல் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் மின் இணைப்புகளோடு ஆதாரை இணைக்கும் பணியை போல, இந்த பணியையும் செய்யலாமே? என கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா என்பது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)