Pongal 2026 : "மண்பானை மணம் வீசும் பொங்கல்: விழுப்பரத்தில் தீவிரமடையும் தயாரிப்பு பணி !
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பானை தயாரிக்கும் பணி இரவு பகலாக மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் : பொங்கல் பண்டிகைக்கு கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானை!
விழுப்புரம் மாவட்டம் சாலைஅகரம், திண்டிவனம்,ஏப்பாக்கம், கிளாப்பக்கம், முன்னூர் பகுதியில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மண்பானைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும், தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் மண் பானையும் சேர்த்துத் வழங்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை ஒன்று தான் பொங்கல் பண்டிகை. இந்த தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1-ஆம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாகக் கொண்டுள்ளனர். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, திண்டிவனம்,ஏப்பாக்கம், கிளாப்பக்கம், முன்னூர், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும், சில வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பெஞ்ஜல் புயலால் பெய்த தொடர் கனமழையினால் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக இந்த வருடம் மண்பானையை விற்பனையை அதிகரிக்க வேண்டும் என தொழிலாளர் தினம் மும்முரமாக தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 வாரங்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகளைத் தயாரித்து வருகின்றனர். ரூ.50 முதல் 500 ரூபாய் வரை பானைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானைகளை முதலில் நன்கு உலர வைத்து, பின்னர் சூளைபோட்டு வேக வைக்கின்றனர்.
இதுபற்றி மண்பாண்டத் தொழிலாளர் சிவஞானம் கூறுகையில்,
“நாங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக இந்த தொழிலைச் செய்து வருகிறோம். வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்துத்தான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது. சுவையும், ஆரோக்கியமும் தந்த மண்பானை சமையல் தற்போது கிராமங்களில் கூட அரிதாகி வருகிறது.
ஒரு சில கிராம மக்கள் பழமை மாறாமல் மண்பாண்டங்களைப் பயன்படுத்தி வருவதால் அவர்களின் தேவைக்காக ஆண்டுதோறும் மண் பானைகள் தயாரிப்பில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். வீடுகளில் உள்ளவர்கள் எவர் சில்வர் பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள், பெரும்பாலானோர் சமையல் கியாஸ் அடுப்புகளில் பாத்திரங்களை வைத்துப் பொங்கல் வைத்து விடுகின்றனர். இதனால் மண்பானையில் மவுசு குறைந்து கொண்டே வருகிறது. எங்களுடைய காலத்தில் மட்டும்தான் மண்பானைகளை பார்க்க முடியும், வரும் சந்ததியினர் கண்டிப்பாக மண்பானை செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் , ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கப்பணமும், கரும்பையும் அரசு வழங்கி வருகிறது. அதுபோல் பொதுமக்கள் பொங்கல் வைப்பதற்கு, முக்கியத் தேவையாக உள்ள மண் பானைகளையும் சேர்த்து வழங்கினால் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அரசு செவிசாய்க்கவில்லை. இந்த ஆண்டாவது அதனை அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என சிவஞானம் தெரிவித்தார்.
அது மட்டும் இல்லாமல்,தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகவும், நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிடும் வகையிலும் அரசு சார்பில் மண் பானைகளைக் கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து மண் பானையையும் வழங்க ஏற்பாடு செய்தால் எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிபிறக்கும்” என மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.





















