சின்னத்தைப் பார்த்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவது துரதிஷ்டவசமானது! – சௌமியா அன்புமணி
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது வரவேற்கத்தக்கது அல்ல என்றும், அது ஒரு துரதிஷ்டவசமான விஷயம்!

விழுப்புரம்: அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது வரவேற்கத்தக்கது அல்ல என்றும், அது ஒரு துரதிஷ்டவசமான விஷயம் என்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள திருவாமத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அபிராமேஸ்வரர் திருக்கோவிலில் பா.ம.க. நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது.,
சின்னத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:
"இதுகுறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவது வரவேற்கத்தக்க விஷயம் அல்ல; அது மிகவும் துரதிஷ்டவசமானது. மக்கள் யாரும் சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பெயரைப் பார்த்து வாக்களிப்பதில்லை, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னத்தைப் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். எனவே, அந்தச் சின்னத்திற்கு நாம் முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்க வேண்டும்."
மேகதாது விவகாரம் மற்றும் நீர் மேலாண்மை
தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை மாநில முதலமைச்சர் அவர்கள் உடனடியாக மத்திய அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்றார்.
மேலும், நமக்கு பெய்யக்கூடிய மழைநீரை வீணாக்காமல் முறையாகச் சேமித்து, நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி விவசாயத்தைச் செழிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்கள் பா.ம.க.விடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் குரல் கொடுக்கும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் வலுவாகக் குரல் கொடுக்கும் என்று சௌமியா அன்புமணி தனது பேட்டியில் உறுதியளித்தார்.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்






















