Vanni Arasu: அலைமோதும் கூட்டம்.. இரவு 11 மணி வரை மக்கள் பணி.. வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு!
தான் பொறுப்பேற்ற நாள் முதல் அமைச்சர் வன்னி அரசு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இரவு 11 மணி வரை தலைமைச் செயலகத்தில் மக்களை சந்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
முதல்முறையாக அமைச்சரவையில் விசிக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாமல் தவித்த அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி ஆட்சி என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருந்த முதலமைச்சர் விஜய் தங்கள் அரசு அமைய ஆதரவு கொடுத்த விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தினார்.
இதில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் பங்கேற்றது. அக்கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னி அரசுவை அமைச்சராக்கி விசிக திருமாவளவன் அழகு பார்த்தார். தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக வன்னி அரசு பொறுப்பேற்றுள்ளார்.
வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு
இந்த நிலையில் தான் பொறுப்பேற்ற நாள் முதல் அமைச்சர் வன்னி அரசு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படும் ஆதி திராவிட நலத்துறைகளின் விடுதிகள், தன் தொகுதி சார்ந்த அம்மா உணவகம் பலவற்றில் வன்னி அரசு ஆய்வு செய்தார்.
மேலும் திண்டிவனம் தொகுதியில் அவரே நேரடியாக சென்று மனுக்களைப் பெற்று தன்னால் முடிந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க உத்தரவிட்டு வருகிறார். மேலும் நரிக்குறவர் இன மக்கள் தலைமைச் செயலகத்தில் வன்னி அரசுவை சந்தித்தபோது அவர்களின் குழந்தைகளை மடியில் அமர்த்தி, வந்திருந்த அனைவருக்கும் இருக்கை அளித்து மரியாதை செலுத்தியது வைரலானது.
அதிகாரத்தில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அவர் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருவதாக இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த மகத்தான வாய்ப்பை உண்டாக்கிய முதலமைச்சர் விஜய்க்கும் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Also Read: உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!
புகார் கொடுக்க குவியும் மக்கள்
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வன்னி அரசு இரவு 11 மணி வரை மக்களை சந்தித்து வருகிறார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனிடையே தலைமைச் செயலகத்தில் வன்னி அரசுவின் அறையில் மக்கள் கூட்டம் தினந்தோறும் குவிந்து வருகிறது. மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் இரவு 11 மணி வரையும் வன்னி அரசு மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தன்னை காண வரும் மக்களுக்கு எந்தவித கெடுபிடியோ, அப்பாயின்மென்ட் வேண்டும் என்ற நடைமுறையே இருக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளாராம். இதனைக் தலைமைச் செயலக ஊழியர்களே ஆச்சரியமாக பார்ப்பதாக அங்கு பணியாற்றுபவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















