Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
கச்சத்தீவு மீட்பு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தின்போது, கச்சத்தீவை மீட்க திமுக அரசு என்ன செய்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், நாங்கள் செய்வது இருக்கட்டும், நீங்கள் பதவியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்க, காரசார விவாதம் நடைபெற்றது.
இபிஎஸ் கேள்வி - முதலமைச்சரின் காரசார பதில் கேள்வி
சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பு குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவர இருந்த நிலையில், கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு ஆண்டுகளில் கட்சத் தீவை மீட்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும், 16 ஆண்டுகள், 5 பிரதமர்கள் தலைமையில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, கட்சத் தீவை மீட்க திமுக என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் சரமாரி கேள்விகளை எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாங்கள் செய்வது இருக்கட்டும், பதவியில் இருந்தபோது நீங்கள், அதாவது அதிமுக என்ன செய்தது என பதில் கேள்வி எழுப்பினார். மேலும், அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, கட்சத் தீவை மீட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, தான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமரை சந்தித்து கட்சத்தீவை மீட்கும்படி கூறியதாகவும், கடிதமும் எழுதியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். முன்னதாக, ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதத்திற்குப்பின், கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

