Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
வரலாறும், அது கூறும் உண்மையும், உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது என, மத்திய அரசை வெளுத்து வாங்கியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னசு. எதற்காக தெரியுமா.?

கீழடி ஆய்வுகளை மத்திய அரசு அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையில், அதை அங்கீகரிக்க, அறிவியல்பூர்வமான முடிவுகள் வர வேண்டும் என அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறிய பதிலுக்கு, பதில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, வரலாறும், அது கூறும் உண்மையும், உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது, உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கூறியது என்ன.?
கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே ஒரு முறை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பின்னர், மத்திய அரசு கேட்டபடி திருத்தி மீண்டும் அனுப்பப்பட்ட கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டி இருப்பதாகவும், அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே, கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்க முடியும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் தங்கம் தென்னரசின் அறிக்கை என்ன.?
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதலில் மத்திய அரசு கீழடியில் ஒன்றுமே இல்லை என்று கூறியதாகவும், அடுத்ததாக ஆய்வு அதிகாரியை இடம் மாற்றியதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு, இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்று மத்திய அரசு கூறியதாகவும், கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டதாகவும், தற்போது வந்து ஆதாரம் போதவில்லை என்று கூறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசிற்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது என்றும், கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழர்கள் 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள், தொழில்நுட்பம் கொண்டவர்கள், மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம் எனவும், தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாக்கத்தாலா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மறந்துவிடாதீர்கள், வரலாறும், அது கூறும் உண்மையும், உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது என்றும், அவை மக்களுக்கானவை, மக்களிடமே சென்று சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டுவிட்டால், உலகம் இருண்டு விடுமோ என்ன? என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில், மத்திய அரசை கேட்டுள்ளார்.





















