தீர்மானத்தால் கர்நாடகா பணியாது! மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் எச்சரிக்கை - தமிழகத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?
மேகதாது தொடர்பான தீர்மானத்தை வரவேற்கிறேன் அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - துரைமுருகன்

“இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது” என்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது குறித்தும் இது தொடர்பாக அம் மாநில முதலமைச்சர் சிவக்குமார் தொடர்ந்து பேசி வரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கர்நாடகா பணியாது
அப்போது அவர் பேசுகையில், “இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது. அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாதுவை கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் கிருஷ்ணா முதல் கொண்டு 6, 7 முதலமைச்சர்களிடமும் பேசி உள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களும் பேசியிருக்கிறார். ஆகையால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். ஆகையால் அணையை கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள்.
ஒட்டுமொத்த தமிழகம் எதிர்க்க வேண்டும்
ஆகையால் தீர்மானத்தை வரவேற்கிறேன் அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், எந்த கூட்டம் கூட்டினாலும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதனுடைய உரிமை உச்ச நீதிமன்றத்தில் தான் உள்ளது. இது நமது வாழ்வாதார பிரச்சனை எந்தவிதமான கட்சி மனமாற்றங்களும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் பாதுகாக்க முடியும். கர்நாடகாவில் கட்சிகள் மோதிக் கொள்வதில்லை. இங்குதான் மோதிக் கொள்ளும் காட்சி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இதனை எதிர்க்க வேண்டும். அதை செய்வார்கள் என கருதுகிறேன்.
அனைத்து கட்சி கூட்டம்
மேகதாது தொடர்பாக படிப்படியாக அனைத்தும் எனக்கு தெரியும்.என்னோட, எங்களோட ரத்தத்தோடு கலந்து இருக்கிற சப்ஜெக்ட் இது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தை இவர்கள் கூட்ட வேண்டும் அப்போதுதான் தீர்வு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து தீர்க்கமாக வாதாட வேண்டும். சரியான வழக்கறிஞர்களை வைத்து வைத்து சரியாக வாதாடி, சரியான நேரத்தில் மத்திய அரசிற்கு கிடுக்கு பிடி போட்டால் ஒழிய நம்மால் இதை சமாளிக்க முடியாது.
பேச்சுவார்த்தை எல்லாம் வேண்டாம்
கர்நாடகா திட்டம் போட்டு மத்திய அரசிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல இரண்டு மூன்று முறை பிளான் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். ஆகையால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகா ஆறு ,ஏழு கட்டங்களை தாண்டி வரணும். அதற்குள் அதனை தடுக்கணும். ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. கோர்ட் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும். ஆகையால் பேச்சுவார்த்தைக்கு ஈடுபட்டால் நமக்கு இழப்பு தான் ஏற்படும்.
ஒரு முறை இல்ல 36 ,37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்” எனக் கூறினார்.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















