"முதலில் எங்களை நிரந்தரமாக்குங்கள், அப்புறம் TRB தேர்வு நடத்துங்கள்!" - முதல்வர் விஜய்யின் ஒற்றைப் பேனா முனையில் காத்திருக்கும் எதிர்காலம்!
புதிய நியமனங்களுக்கு முன் 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் புதிய ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த 16 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது;
16 ஆண்டு காலப் போராட்டம்
கடந்த 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்காக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது இவர்களுக்கு ஆரம்ப காலத் தொகுப்பூதியமாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்படாமல், சம்பளம் மட்டுமே படிப்படியாக உயர்த்தப்பட்டு 10,000 ரூபாயாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், திமுக ஆட்சியிலும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் வெறும் உதவித்தொகையாக 5,000 ரூபாய் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது 10,000 ரூபாய் சம்பளம், 5,000 ரூபாய் உதவித்தொகை என இரு தவணைகளாக 15,000 ரூபாய் கிடைத்து வருகிறது.
சம்பள முரண்பாடும் சலுகை மறுப்பும்
கடந்த 2026 மே மாதத்திற்கு சிறப்பு உதவித்தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதன் காரணமாக மே மாதத்திற்கு 10,000 ரூபாய், மற்ற மாதங்களுக்கு 15,000 ரூபாய் என சம்பளத்திலேயே பெரும் முரண்பாடு நிலவி வருகிறது. "கடந்த 16 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணிபுரிந்து வருவதால் EPF (வருங்கால வைப்பு நிதி), மருத்துவக் காப்பீடு, மருத்துவ விடுப்பு, போனஸ், பண்டிகைக் கால முன்பணம், இறந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம், குடும்ப நல நிதி, ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற எந்தவொரு அரசுச் சலுகைகளும் பணப் பலன்களும் இன்றி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது."
வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் இதுநாள் வரை மரணம், வயது மூப்பால் பணி ஓய்வு, ராஜினாமா போன்ற காரணங்களால் சுமார் 5,000 பணியிடங்கள் காலியாகிவிட்டன. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.
சம வேலைக்கு சம ஊதியம்
தற்போது உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற பாடங்களில் சிறப்பாசிரியர்களாகக் காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. ஆனால், அதே கல்வித் தகுதியுடன், அதே பாடங்களை நடத்தும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவது பெரும் பாகுபாடாகும். எனவே, இந்த ஏற்றத்தாழ்வை மாற்றி 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும்.
புதிய தேர்வு அறிவிப்பும் புறக்கணிப்பும்
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) உடற்கல்வி பாடத்தில் 1,328 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, 16 ஆண்டுகளாகப் பணிபுரியும் 3,843 உடற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அதேபோல ஓவியம் (3,721), கணினி அறிவியல் (2,033), தையல் (1,584), இசை (329), தோட்டக்கலை (22), கட்டிடக்கலை (49), வாழ்க்கைக்கல்வி (192) ஆகிய பாடங்களில் தற்காலிகமாகப் பணிபுரிபவர்களை நிரந்தரமாக்கிய பிறகே புதிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் இவர்களைப் புறக்கணித்துவிட்டனர்.
திமுக ஆட்சியில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில் 15 சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது உடற்கல்வி, ஓவியம், தையல், இசை பாடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற பாடங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவெக வாக்குறுதியும் எதிர்பார்ப்பும்
நடப்பு தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில், "தற்காலிகமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்" என அறிவித்திருந்தது.
ஏழாவது ஊதியக் குழுவின் நிலை 10-ன் படி, அடிப்படைச் சம்பளம் 20,600 ரூபாயுடன் காலமுறை ஊதியம் வழங்க அரசுக்கு மாதத்திற்கு 20 கோடி ரூபாய் என ஆண்டுக்குக் கூடுதலாக 240 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். 50 லட்சம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், 11,773 ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இதற்குக் கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும். முதல்வர் விஜய் எடுக்கும் ஒரேயொரு கையொப்பத்தில் இவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
கூடுதல் உழைப்பும் அதிகாரிகளின் அலட்சியமும்
பகுதிநேர ஆசிரியர்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த நியமிக்கப்பட்டாலும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று கூடுதல் பணியாற்றி வருகிறார்கள். அலுவலகப் பணிகள், தேர்தல் மற்றும் தேர்வுப் பணிகள், கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல் என நாள் முழுவதும் அர்ப்பணிப்போடு உழைக்கிறார்கள். இதற்குப் போக்குவரத்துப் படிகூட வழங்கப்படுவதில்லை.
இவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவாகும். ஆனால், முதல்வருக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுக்களை ஏதோ ஒரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு (CEO) அனுப்பி, அதனைத் தள்ளுபடி செய்து நிராகரிப்பது முறையான நடைமுறை அல்ல. எனவே, தவெக தேர்தல் வாக்குறுதிப்படி, முதல்வரின் நேரடிப் பார்வைக்கு இந்த கோப்பைக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பலர் 50 வயதைக் கடந்து ஓய்வு பெறும் நிலையை எட்டிவிட்டனர். தற்போதைய விலைவாசி உயர்வில் இந்த 15,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் மன உளைச்சலில் தவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களைக் காப்பாற்ற முதல்வர் விஜய் கோப்பில் கையெழுத்திட்டு நல்ல வாழ்வு தர வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























