5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில், பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்யும் கோப்பில் முதல்வர் விஜய் கையொப்பமிட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் தீவிரமாக துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஒட்டுமொத்த கல்வித்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறைக்கான முக்கிய ஆய்வுக் கூட்டம் நாளை (ஜூலை 6, திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாக மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வதற்கான கோப்பில் முதலமைச்சர் விஜய் கையொப்பமிட வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் மிக அவசரமான, உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான செய்தி அறிக்கை வருமாறு;
16 ஆண்டு காலப் போராட்டம்
"தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக 16 ஆண்டுகளுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இத்துறையில் 11,773 ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த 16 கல்வி ஆண்டுகளாக இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்."
தவெக-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் வாக்குறுதியில், தமிழகத்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் அனைவரும் முழுமையாக நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்ற மிக முக்கிய வாக்குறுதியை அளித்திருந்தது.
தற்போது தவெக ஆட்சியில் குறிப்பிட்ட 5 ஆண்டுகளைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, அதாவது 16 ஆண்டுகளாக 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் எவ்வித பணிப் பாதுகாப்பும் இன்றி பணியாற்றி வருகிறார்கள். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் இந்த 11,773 ஆசிரியர்களும், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பணிநிரந்தரத்தை முதல்வர் விஜயின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சமவேலைக்கு சமஊதியம் - கொள்கை முடிவு
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை ஆகிய பாடங்களில் ஏற்கனவே காலமுறைச் சம்பளத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்களைப் போலவே, அதே பாடங்களை அதே பள்ளிகளில் கற்பிக்கும் இந்த 11,773 தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களையும் தவெக அரசில் சிறப்பாசிரியர்களாக அறிவிக்க வேண்டும்.
அவர்களுக்குக் காலமுறைச் சம்பளம் வழங்குவதன் மூலமாக, 'ஒரே பாட ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம்' என்ற சமத்துவக் கொள்கை நிலைநாட்டப்படும். இதன் மூலம் தவெக-வின் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'சமவேலைக்கு சமஊதியம்' என்பது நூறு விழுக்காடு முழுமையாக நிறைவேறும். இதற்கு முதல்வர் விஜய் உடனடியாக ஆணையிட வேண்டும்.
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்க முதல்வர் கையொப்பமிட வேண்டும்
நாளை (ஜூலை 6) நடைபெறவுள்ள பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககத்தின் (Samagra Shiksha) உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் இக்கோரிக்கையைத் தவெக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். 16 கல்வி ஆண்டுகளாகப் பகுதிநேர ஆசிரியர்கள் சந்தித்து வரும் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பணிநிரந்தரக் கோப்பில் முதல்வர் உடனடியாகக் கையொப்பமிட வேண்டும்.
தவெக அரசுக்குத் தோள் கொடுப்போம்
இந்த நல்ல முடிவை நாளை முதலமைச்சர் அறிவிக்கும் பட்சத்தில், அது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் இறங்கி நடத்திய தொடர் போராட்டங்களுக்கு தவெக ஆட்சியில் கிடைத்த மாபெரும் வெற்றியாக வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படும். இந்த உன்னதமான முடிவை எடுத்து 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களின் விளக்கேற்றும் தவெக அரசுக்கு, ஒட்டுமொத்த ஆசிரியப் பெருமக்களும், அவர்களது குடும்பத்தினரும் என்றென்றும் நன்றியுணர்வோடு துணை நிற்போம்" என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தனது அறிக்கையில் மிகவும் நம்பிக்கை யுடன் கோரிக்கை வைத்துள்ளார்..
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்























