சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி பெயர் எழுதலாமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி பெயர் எழுதலாமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி விசாரணை நடத்தினார்.
அப்போது பேசிய நீதிபதி, “இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், தங்கள் சாதியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சாதிதான் முக்கியம். சாதியை சேர்ந்தவர்கள்தான் உறுப்பினர்களாக முடியும். இதுபோன்ற சாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
நாட்டில் அனைவருக்கும் சங்கத்தை உருவாக்க உரிமை உள்ளது. சாதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன், சாதியின் பெயரில் உரிய சட்டத்தின் கீழ் சங்கம் தொடங்க முடியுமா? இந்த கேள்விக்கு விடை வேண்டும்.
அறிவியல் வளர்ச்சி மற்றும் சமுதாய தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக சங்கங்களின் சட்டத்தின்படி சங்கங்களை தொடங்கலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டம் சாதியில்லா சமூகங்களை உருவாக்க வேண்டும் என கூறுகியிறது.
சங்க பதிவு சட்டங்களின்படி சாதியின் பெயரில் சங்கங்கள் தொடங்க முடியுமா? சாதி சங்கங்கள் பள்ளி, கல்லூரிகள் நடத்துகின்றன. கல்வி நிறுவனங்களில் நுழைவுவாயிலில் பள்ளியின் பெயரோடு சாதி பெயரும் குறிப்பிடுகின்றனர். பள்ளிக்கூடத்திற்குள் சாதி இல்லையடி பாப்பா என்று ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சாதிகள் பெயர் நுழைவு வாயிலில் உள்ளது.
இந்த விவகாரத்தில் அரசின் நிலை என்ன? இதுகுறித்து வரும் 19ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

