![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர்: தரமற்ற முறையில் கட்டப்படும் கிருஷ்ணராயபுரம் பாலம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
பொதுமக்கள், இளைஞர்கள் இரண்டு வாய்க்கால்களின் குறுக்கே புதிதாக அகலமாக பேருந்துகள் சென்று வரக்கூடிய வகையில் பாலம் அமைத்து தர வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
![கரூர்: தரமற்ற முறையில் கட்டப்படும் கிருஷ்ணராயபுரம் பாலம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு Karur Krishnarayapuram bridge is being constructed in a substandard manner TNN கரூர்: தரமற்ற முறையில் கட்டப்படும் கிருஷ்ணராயபுரம் பாலம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/5e8669d47c76fb93b02ae433e9df787a1679032302571183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டியில் இரண்டு பாசன வாய்க்கால்களின் குறுக்கே ரூ. 2.85 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் இரண்டு வாய்க்கால்களின் குறுக்கே புதிதாக அகலமாக பேருந்துகள் சென்று வரக்கூடிய வகையில் பாலம் அமைத்து தர வேண்டுமென, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அதனை ஏற்று ரூபாய் 2.85 கோடி மதிப்பில் இரு கட்டளை வாய்க்கால்களின் குறுக்கே 2022 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு குளித்தலை சேர்ந்த பழனிசாமி என்பவர் டெண்டர் எடுத்து கடந்த வருடம் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கினர். ஆனால் பணிகள் மிகவும் மந்த கதியில் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டு வாய்க்காலில் ஜூன் மாதத்திற்குள் முடிவடைய வேண்டிய பாலம் கட்டுமான பணியில் ஒரு வாய்க்காலில் தூண்கள் பாதி அமைத்த நிலையிலேயே நின்றது.
அதன் பின்னர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாலம் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதிக்கு மேல் மீண்டும் பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. ஆனாலும் பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் பாலம் கட்டுவதற்காக 10 அடி ஆழம் தோண்டப்பட்டு கான்கிரீட் அடிதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அடித்தளம் தோன்றிய குழியில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றாமல் கான்கிரீட் கொட்டப்பட்டு அடித்தளம் அமைக்கப்படுகின்றன.
இதனால் கான்கிரீட் கலவை நீரில் கரைந்து வெளியேறியது. இதனால் பாலத்தின் அடித்தளம் வலுவாக அமையாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. ஒப்பந்ததாரரும் பாலத்தின் அடித்தளத்தை சரியான முறையில் வலுவாக அமைப்பதற்கு பதிலாக கான்கிரீட் கலவையை மனம் போன போக்கில் கடமைக்காக செய்வதுபோல் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால் பின்நாளில் பாலம் கூடிய விரைவில் வலுவிழந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தங்களின் பத்தாண்டு கால கோரிக்கை நிறைவேறி பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் வேளையில் தற்போது தரம் இல்லாத கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் சரவணன் இடம் கேட்டபோது, நாங்கள் தரமாகத்தான் பாலம் போடுகிறோம். தண்ணீர் இருக்கும்போது கலவை கொட்டி போட்டாலும் உறுதியாக இருக்கும் என கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)