Jallikattu 2025: கரூர் ஜல்லிக்கட்டு போட்டி; முதல் பரிசாக ஆல்டோ காரை வென்ற ஜித்தன் மாடு
மதுரை மாவட்டம் செக்கானூர் பேக்கரி கடையின் உரிமையாளர் வளர்த்து வந்த ஜித்தன் மாடு முதல் பரிசாக ஆல்டோ கார் ஒன்றை பரிசாக வென்றது.

கரூர் ஆர்டி மலையில் நடைபெற்ற 63 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இறுதியாக வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர் டி மலையில் 63 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி தொடர்ச்சியாக மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 734 க்கு மேற்பட்ட காளைகளும் 380-க்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதைத் தொடர்ந்து போட்டியை தொடங்கி வைத்த மின்சாரத்துறை அமைச்சர் போட்டியை கண்டு களித்தார். பின்னர் இறுதியாக ஆறு சுற்றுகள் நடைபெற்று நிலையில் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மாடு உரிமையாளர் மதுரை மாவட்டம் செக்கானூர் பேக்கரி கடையின் உரிமையாளர் வளர்த்து வந்த ஜித்தன் மாடு முதல் பரிசாக ஆல்டோ கார் ஒன்றை வென்றது. இதனை மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழங்கினார். அதை தொடர்ந்து இரண்டாவது பரிசை ஆர் டி மலை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வளர்த்த காளைக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 22 மாடுகளை பிடித்த சிறந்த மாடுபிடி வீரர்க்கான முதல் பரிசான இருசக்கர வாகனத்தை நாமக்கல் மாவட்டம் எருப்பம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், 14 காலை மாடுகளை அடக்கிய திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த சுதர்சன் இரண்டாவது பரிசையும் மின்சாரத் துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , அடுத்த ஆண்டு முதலமைச்சர் ஆணைக்கிணங்க சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக கார் வழங்கப்படும் எனப் பேசி மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போட்டியில் 16 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் 12 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர் குறிப்பாக வேடிக்கை பார்த்த 65 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

