Armstrong Case to CBI: சிபிஐ-க்கு மாற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை - ஆம்ஸ்ட்ராங் சகோதரர் வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி, தனது வீட்டின் அருகே கூலிப்படையால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கை செம்பியம் காவல்துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை எனவும், அதனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்த போது, காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக கூறியதாகவும், காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இது அரசியல் கொலை இல்லை என்றும், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.
அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் - மனுதாரர் தரப்பு
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடட்ம விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டதாகவும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
காவல்துறை மீது நீதிபதி அதிருப்தி
இதையடுத்து, கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில், கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என காவல்துறை தரப்பிடம் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.
இன்றைய விசாரணையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிபதி அதிரடி
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கிற்கான உத்தரவை பிறப்பித்தார்.
அப்போது, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, சிபிஐ வசம் உடனே ஒப்படைக்க வேண்டும்“ என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து, 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.





















