Governor RN Ravi: ஆளுநர் மோதல் விவகாரம்: குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள்!
சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் எழுதிய கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கினர்.
பின்னணி என்ன?
முன்னதாகக் கடந்த வாரம் சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ''இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது'' எனவும் கூறி இருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு என்ற வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.
சட்டப்பேரவையில் பரபரப்பு
இதற்கிடையே ஜனவரி 9 நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநருக்குக் கண்டனம்
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினர். ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை எம்.பி.க்கள் ஆர். ராசா, டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை எம்.பி. என்.ஆர். இளங்கோ சென்றது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets