பத்திரப்பதிவு துறையில் கமிஷன் வாங்குனேனா? .. நிர்மல் குமாருக்கு மூர்த்தி சரமாரி பதிலடி!
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் என்ற முறையில் நான் எந்த பத்திரத்தையும் பதிவு செய்ய யாரையும் ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை என மூர்த்தி தெரிவித்தார்.

பத்திரப்பதிவுத்துறையில் ஆட்களை நியமித்து கமிஷன் பெற்றதாக தன்மீது குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு முன்னாள் திமுக அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
பழனி நில மோசடி விவகாரம்
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலம் ரூபாய் 2 கோடிக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த போலி பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. நிலத்தை பத்திரப்பதிவு செய்ததில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் இதுவரை ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்.
அமைச்சர் மூர்த்தி மீது குற்றச்சாட்டு
இதற்கிடையில் கடந்த வாரம் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த திமுக ஆட்சியில் இரவு 9 மணி வரை பத்திரப்பதிவு நடந்துள்ளது எனவும், பத்திரப்பதிவு துறைக்கு அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் பெறுவதற்காகவே தனியாக ஒவ்வொரு அலுவலகங்களிலும் தனியாக 2 ஆட்களை நியமித்திருந்தார் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். இந்த நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களில் சந்தித்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆதாரமின்றி பேச வேண்டாம்
இது தொடர்பாக பேசிய அவர், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதாரம் இன்றி எதனையும் பேசக்கூடாது எனவும், கடந்த திமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார். ஆனால் அமைச்சர் என்ற முறையில் நான் எந்த பத்திரத்தையும் பதிவு செய்ய யாரையும் ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை என மூர்த்தி தெரிவித்தார்.
Also Read: உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
மேலும் ஒரு சார்பதிவாளரிடம் கூட இது தொடர்பாக பேசியது கிடையாது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் லஞ்சம் இருக்காது என சொல்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த பிறகு 60 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரூபாய் 37 லட்சம் கைப்பற்றியுள்ளனர் இதற்கு பெயர் என்ன எனவும் மூர்த்தி கேள்வியெழுப்பினார்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள் இருந்தாலும் தனது துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறைகள் குறித்தும், தமிழக முதல் தேசிய கூட்டணி வரை அரசியல் பேசி முதலமைச்சர் விஜய்க்கு நிழல்போல நிர்மல் குமார் செயல்படுகிறார் என மூர்த்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















