ரோடு போட வரல... ஆள் சேர்க்க மட்டும் வரீங்க.. இளைஞரை மிரட்டிய திமுக எம்எல்ஏ! அதிர்ச்சி வீடியோ!
திமுக உறுப்பினர் சேர்க்கையில், சாலை போடவில்லை, ஆள் சேர்க்க மட்டும் வரீங்க என கேட்ட இளைஞரை திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டிய வீடியோ வைரல்.

கள்ளக்குறிச்சி: தொட்டியம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், சாலை போடவில்லை, ஆள் சேர்க்க மட்டும் வரீங்க என கேட்ட இளைஞரை திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
சாலை போடவில்லை, ஆள் சேர்க்க மட்டும் வரீங்க!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், சாலை வசதி செய்து தரவில்லை, உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து கேள்வி கேட்ட இளைஞரை திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டும் விதமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏ உதயசூரியனின் இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களிடம், “சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர். வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர்.
கட்டப்பஞ்சாயத்து மாடல்
திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களோ ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார். திரு. உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.
திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள். ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள். அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.




















