DMK: தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை.. திமுகவின் திட்டம் இதுதான்!
தமிழ்நாடு எப்படி வளர்ச்சியின் பக்கம் நிற்கிறது, அதற்கு திராவிட மாடல் அரசு எப்படி முயற்சிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த பிரச்சாரம் அமையும் என திமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் நாளை (பிப்ரவரி 1) முதல் திமுக தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதில் என்ன மாதிரியான திட்டங்கள் இடம்பெறும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த பரப்புரையானது பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 தொகுதிகள் வரை பரப்புரையானது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரப்புரை குறித்து திமுக செய்தி தொடர்ப்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழிலன் எம்எல்ஏ, கனிமொழி சோமு எம்.பி. ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரிலான திட்டத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் 22 பேரை திமுக தலைமைக் கழகம் அடையாளம் கண்டு ஒவ்வொருவருக்கும் தொகுதி பிரிக்கப்பட்டு, அதில் பரப்புரை மேற்கொள்ள தேதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு மாதம் முழுவதும் காலை வேளையில் அந்த தொகுதியில் இருக்கும் திமுக தலைவர்கள், கட்சியின் முன்னோடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், வணிகர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுதல் போன்றவை நடைபெறும். இதில் 5 ஆண்டுகள் திமுக அரசு செய்த சாதனைகள், அமல்படுத்திய திட்டங்கள், சம்பந்தப்பட்ட தொகுதியில் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் பற்றியும், அதனால் மக்கள் பயனடைந்தது பற்றி பேசுவார்கள்.
தெருமுனை கூட்டம் மூலம் தேர்தல் பரப்புரை
இதற்கடுத்து தெருமுனை கூட்டம், தெருமுனை பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அதன்மூலம் திமுகவின் கொள்கைகள், சாதனைகள் பற்றி உரையாற்றுவார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் ஓரவஞ்சனை போக்குடன் பாஜக அரசு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி விளக்கப்படும். பாஜக ஆளும் மாநிலங்களிலும், ஆளாத மாநிலங்களிலும் காட்டப்படும் வேறுபாடு பற்றி எடுத்துரைக்கப்படும்.
#தமிழ்நாடு_தலைகுனியாது pic.twitter.com/iu3LNuvkk5
— DMK (@arivalayam) January 27, 2026
தமிழ்நாடு எப்படி வளர்ச்சியின் பக்கம் நிற்கிறது, அதற்கு திராவிட மாடல் அரசு எப்படி முயற்சிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த பிரச்சாரம் அமையும். 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். 91 வாக்குறுதிகள் மத்திய அரசின் உதவியுடன் தான் நிறைவேற்ற முடியும். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இதன்மூலம் அதிருப்தியாளர்களுக்கு தேவையான பதில் கிடைக்கும்.
இந்த திட்டங்கள் பற்றி மக்களவை, மாநிலங்களவையில் இருக்கும் எம்.பி.,க்கள் அனைத்து துறை அமைச்சர்களிடமும் தொடர்ச்சியாக கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் பாராமுகத்துடன் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.























