Duraimurugan Vs Anbumani: “விவரமானவருன்னு பாத்தா, கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியலையே.?!“ - அன்புமணியை விளாசிய துரைமுருகன்
தடுப்பணைகள் குறித்த அன்புமணியின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் துரைமுருகன், அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை என விளாசியுள்ளார். அவர் என்ன கூறினார்.? பார்க்கலாம்.

வேலூரில் நேற்று பேசிய அன்புமணி, இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர், பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அன்புமணி விவரம் தெரியாமல் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கை குறித்து தற்போது பார்க்கலாம்.
“அவர் விவரமானவர்னு நினைச்சேன், ஆனா கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியலையே.?“
அன்புமணிக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி, தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யா அவர்களை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார் எனவும், இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த திக் விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் போர்பிரகடனம் செய்திருக்கிறார் எனவும், அவர் பேசுகிறபோது, தன் மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் தான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல், தன்னுடைய அமைச்சர் பணி குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை தன் மீது சுமத்தியிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார், அவரை நான் கேட்கிறேன்.. பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று அன்புமணி முழக்கமிட்டிருக்கிறார். அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து, அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்“ என அமைச்சர் துரைமுருகன் விளாசியுள்ளார்.
தன்னுடைய பணிகளை பட்டியலிட்ட அமைச்சர் துரைமுருகன்
மேலும், தலைவர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை ஆரம்பித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக, தான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், பாலாற்றில், இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல், கவுண்டன்யாநதியில், ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பொன்னையாற்றில், பரமசாத்து-பொன்னை, குகையநல்லூர், பாம்பாற்றில், மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில், கரியகூடல், அகரம் ஆற்றில், கோவிந்தப்பாடி, மலட்டாற்றில், நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில், பெரியாங்குப்பம், கன்னாற்றில், சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருப்பதாக, அமைச்சர் துரைமுருகன் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம் அம்முண்டி, வெப்பாலை, ஆகிய இடங்களில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என, தனது அறிக்கையின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.





















