CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
சென்னையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்தும், திமுக கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பது குறித்தும், முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தமிழகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களை சேர்த்து, மொத்தம் 55 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் பெரும்பாலமான எம்.பி.க்.கள் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். இதனால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவதாக அமையும். இந்த சூழ்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுடன், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன், காதர் மொய்தீன், வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 50-வது திருமணநாளையொட்டி கூட்டணி கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.





















