Premalatha on Alliance: தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டி.? தேர்தலில் யாருடன் கூட்டணி.? தெளிவுபடுத்திய பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டில், வரும் சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கூறியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தி, கூட்டணி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அவர் என்ன சொன்னார்.?

தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இப்போதைய சூழலில் நான்கு முனை போட்டி நிலவுவதாக தெரிவித்தார். மேலும், தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதற்கும் அவர் பதிலளித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தென்காசியில் மக்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை அவர் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் மெயின் அருவியை பிரேமலதா பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, குற்றாலநாதர் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
“தமிழ்நாட்டில் 4 முனை போட்டி - தேமுதிக தனித்து போட்டியிடாது“
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியல் நிலவரம் குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். எத்தனை முனை போட்டி இருந்தாலும், மக்கள் தீர்ப்பே இறுதியானது என்று அவர் கூறினார். மேலும், இந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
தேமுதிக யாருடன் கூட்டணி.?
இதைத் தொடர்ந்து, கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேர்தலுக்கு இன்னும் சில காலம் உள்ளதால், சரியான நேரத்தில் சரியான கூட்டணி அமைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வருவதாகவும், பொதுமக்கள் நாள்தோறும் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களால் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். அதோடு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், சமீபத்தில் சென்னையில் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் பாதுகாப்பு நிலைமையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















