திமுக - அதிமுக கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் தான் தூதர்கள்.. நிர்மல்குமார் விளாசல்!
அதிமுகவில் என்ன செய்கிறோம் என தெரியாமல் ஒவ்வொரு முன்னாள் அமைச்சரும் 10 பேரை வைத்துக் கொண்டு மேடையைப் போட்டு பேசுகிறார்கள். அவர்கள் புரிந்து தான் பேசுகிறார்களா என தெரியவில்லை என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக இணையும் கூட்டணிக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும் தூதர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அனிதா ராதாகிருஷ்ணன் 6 மாதத்தில் இந்த ஆட்சி கவிழும் என சொன்னது பற்றியும், ராஜேந்திர பாலாஜி மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் ஆட்சி இருக்காது என சொன்னது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இவர்கள் இரண்டு பேரும் பேசுவதைப் பார்த்தால் திமுக, அதிமுக கூட்டணிக்கு இவர்கள் தான் தூதர்களா என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் ஒன்றும் அசையப் போவதில்லை. ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் வரை எங்கு இருக்கப் போகிறார் என தெரியவில்லை. தென் மாவட்டங்களில் அதிமுக கிளைக்கழகம் வரை கட்சியே இல்லாமல் தான் இருக்கிறது.
மாவட்ட அளவில் மட்டும் தான் அதிமுக உள்ளது. கட்சியில் என்ன செய்கிறோம் என தெரியாமல் ஒவ்வொரு முன்னாள் அமைச்சரும் 10 பேரை வைத்துக் கொண்டு மேடையைப் போட்டு பேசுகிறார்கள். அவர்கள் புரிந்து தான் பேசுகிறார்களா என தெரியவில்லை. நேற்றைய தினம் எல்லா முன்னாள் அமைச்சர்களும் ஆளுக்கொன்றாக பேசுகின்றனர். அதில் ஒருவர் பாஜக எல்லாத்தையும் பார்த்துக்கிடும் என சொல்கிறார். மற்றொருவர் ஸ்டாலின் கோபப்பட வேண்டும் என நினைக்கிறார். அங்கு யாருக்குமே அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதில் நம்பிக்கையில்லை. அக்கட்சியினருக்கே அது தெரியவில்லை” என விமர்சித்தார்.
தொடர்ந்து அவரிடம், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் வீரபாண்டியன் இந்த ஆட்சியில் அதிகமாக குதிரைபேரம் நடக்கிறது” என குற்றம் சாட்டியிருக்கிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “குதிரை பேரத்தில் யார் மாட்டியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் தான் மாட்டியிருக்கிறார்கள். குதிரை பேரம் என்றால் யாரையாவது பணம் கொடுத்து வாங்குவது தான். தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வருபவர்களை குதிரைப் பேரமாக கருத முடியாது. அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட முடிவாகும். யாரையும் நாங்கள் வாங்க என அழைக்கவில்லை. மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைப்பை பிடிக்காமல் கூட வந்திருக்கலாம்” என பதிலளித்தார்.
குதிரைப்பேரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை மற்றும் சிபிஐக்கு திமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது பற்றி அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, திமுகவால் வேறு என்ன செய்ய முடியும்?.. சிபிஐக்கு கடிதம் எழுதினால் அவர்கள் வந்து விசாரிக்க மாட்டார்கள் என்பது ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா?.. சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றால் ஒன்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் அல்லது அரசு முடிவெடுக்க வேண்டும். டைம்பாஸ் ஆகவில்லை என அறிவாலயத்தில் இருந்துக் கொண்டு ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியிருக்கிறார். இதை நாம் பெரிதாக எடுக்கத்தேவையில்லை.
அதேசமயம் ஆளுநர் தான் இந்த விவகாரத்தில் என்ன செய்து விட முடியும்?.. அவருக்கும் தான் எல்லாம் தெரியும்.. செந்தில் பாலாஜி மற்றும் அவர் தரப்பு ஆட்சிகள் ஈடுபட்டதும் ஆளுநருக்கு தெரியும். இப்போது வரும் தொடர்ச்சியாக குதிரைப் பேரத்தில் திமுக, அதிமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
Before You Go
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
ட்ரெண்டிங் செய்திகள்






















