பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததற்கு சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமானஅ ரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று சிபிஎம் விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
மேலும், ‘விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் நேற்று (25.05.2026) வெளியிட்டுள்ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமான இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது. குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000/- சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000/- வரை தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு பெற்ற கடன் தொகையில் சிறு தொகை மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் இந்த அறிவிப்பு இல்லை என்பதை விவசாயிகள் சார்பாக சுட்டிக்காட்டுகிறோம். எனவே, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகித கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















